Pages

Monday 22 August 2016

அகநானூறு Agananuru 194

கிளி ஓட்டும் மகளிர் குரல் போல 
மயில் அகவும் குரல் இருக்கும்.

1

பெருமழை பொழிந்த பின் 
புலரும் விடியற்கால வேளையில் 
உழவர் ஏர் பூட்டி உழுவர். 
அவ்வாறு உழுது புறண்டு கிடக்கும் ஈரமுள்ள செம்புழுதி 
கிழித்த புண் போலத் தோன்றும். 
அதில் விதைத்த விதை முளைத்து வளரும்.

2

கிளைக்கொம்பு கொண்ட இரலைமான் 
ஆங்காங்கே மேய்வது போல 
உழவர்கள் தலையில் குடையை மாட்டிக்கொண்டு 
பாடிக்கொண்டே களை வெட்டுவார்கள்.

3

களை எடுத்த வரகு கதிர் வாங்கும். 
அதனை, 
தலையில் குடுமி கொண்ட மயில் 
தன் தோகையை விரித்துக்கொண்டு மேயும்.

4

பின்னர் 
அந்த மயில் 
வலிமையான இலைகளைக் கொண்ட குருந்த மரத்தில் 
ஏறி இருந்துகொண்டு, 
கிளியோட்டும் மகளிர் பாடுவது போலக் 
குரல் எழுப்பி அகவும். 
இப்படி மயில் அகவும் கார் காலம் இது அல்லவா?
தோழி!

5

போரை முடித்துக்கொண்டு 
தேரில் ஏறிக் 
குதிரையை முடுக்கிக்கொண்டு வந்துவிடுவேன் 
என்று நம்மிடம் சொல்லிச் சென்றாரே 
அந்தக் கார்காலம் இது அல்லவா, 
தோழி? 

தலைவி தோழியிடம் இவ்வாறு வினவுகிறாள். 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை

1
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
வித்திய மருங்கின் விதை பல நாறி,    5
2
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
3
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, 10
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
4
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் 15
கார்மன் இதுவால் தோழி! ''போர் மிகக்
5
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும்'' என்று அவர் தெளித்த போழ்தே.

பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது.
இடைக்காடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

உழவுப் புழுதி

4 comments:

  1. Hello sir. The explanation is very easy to understand but in the 3rd point I don't understand the 1st sentence. Can u explain me that sir?

    ReplyDelete
    Replies
    1. இப்போது புரிகிறதா, பாருங்கள். இன்றேல் மேலும் விளக்குகிறேன்.

      Delete