Pages

Wednesday, 10 August 2016

அகநானூறு Agananuru 156

வெயிலைத் தணிக்கத் தழையாடை உடுத்திக்கொண்டனர்.


1
முரசு முழங்கும் செல்வம் படைத்தவர்கள் தம் வண்டிக்குதிதிரைத் தலையில் குஞ்சம் கட்டியிருப்பர். அந்தக் குஞ்சம் போல நெல் கதிர் விட்டு விளைந்திருக்கும். அதனை வயது முதிர்ந்த பசு மேய்ந்துவிடும்.  இந்த அச்சத்தில் காவலர் காஞ்சி மரத்தில் மூதாவைக் கட்டிவைப்பர்.  பாகல் கொடியும் பகன்றைக் கொடியும் பறித்துக் கயிறாக்கிக் கட்டிவைப்பர். கரும்பை தீனியாகப் போட்டுக் கட்டிவைப்பர். அப்படிப்பட்ட ஊரின் தலைவன் நீ. தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
2
குவளை போன்ற கண்ணை உடையவள் இவள். இவளும் நானும் உன்னுடன் திறமையாகப் பொய்தல் விளையாடினோம். வயலில் இருக்கும் ஆம்பல் தழையைப் பறித்து, வெயில் தாக்காமல் இருக்கும் தழையாடை புனைந்து, உடுத்திக்கொண்டு “பொய்தல் விளையாட்டு பொலிக” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டு விளையாடினோம். பெரும! அப்படி விளையாடியது தவறோ?
3
இந்த விளையாட்டு இல்லாமையால் இவளது மணிநிற மேனி பொன்நிறம் பெற்றது. இந்தப் பொன்னிறத்தைப் போக்கத் தாய் முருகனுக்கு விழா கொண்டாடுகிறாள். கள்ளையும், கண்ணிமாலையையும் முருகனுக்குக் கையூட்டாகத் தருகிறாள். பொன்னிறம் பெற்ற இவள் மேனி வருத்தம் தணியவில்லை. தாய் அழுகிறாள். என்ன செய்வது?
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்

1
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கி அன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,     5
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! திறவதாகக்
2
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,   10
''பொய்தல் ஆடிப் பொலிக!'' என வந்து,
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
3
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,           15
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?

தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.
ஆவூர் மூலங்கிழார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

நெல்லங்கதிர்

No comments:

Post a Comment