Pages

Friday, 5 August 2016

அகநானூறு Agananuru 143

பிட்டன் குதிரைமலைக் கவாண் (கணவாய்)


வானவனின் படைத்தலைவன் பிட்டன் நாட்டுக் குதிரைமலைச் சுனையில் பூத்த நீலமலர் போன்ற அவளது கண் அழுகிறது. எதற்காக? தோழி தவைவனிடம் சொல்கிறாள்.  

1
ஐய, பொருள் செய் வினை மேற்கொண்டு இவளைப் பிரிய எண்ணுகிறீர். காடே கட்டழகை இழக்கும்படிக் கடுமையான வெயில் காய்கிறது. மரக்கிளைகள் இலைகள் இல்லாமல் வறுமையுற்றுக் கிடக்கின்றன.
2
சருகாகிக் கிடக்கும் தேக்கிலைகள் மேலைக்காற்றால் ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்றன. மூங்கிலில் பற்றிய தீ அதில் விழுந்து பற்றி எரிகிறது. எரியும் வெடிமுழக்கம் மலைப் பிளவுகளில் எதிரொலிக்கிறது.
3
“இப்படிப்பட்ட கொடுமையான மலைக்காட்டைக் கடந்து செல்லப்போகிறேன்” என்று நீ வாயால் சொன்னதற்கே இவள் கண்கள் நீரைக் கொட்டுகின்றன.
4
பிட்டன் வானவனின் படைத்தலைவன். குறைபாடு இல்லாமல் கடுமையாகப் போர் புரியும் ஆற்றல் மிக்கவன்.
 
வந்தவர்களுக்கெல்லாம் வளமான பொருள்களைச் சுரக்கும் ஊற்றாக விளங்குபவன்.
 
வீரக் கழல் அணிந்தவன். வாளாற்றல் மிக்கவன். உயர்ந்த மலைமுகடு கொண்ட குதிரைமலைச் சாரலுக்கு அரசன்.
 
அவன் மலையில் உள்ள சுனையில் பூத்திர்ருக்கும் நீல-மலர் போன்றவை இவளது கண்கள். அந்தக் கண்கள் அழுகின்றன. அதற்காக நான் நொந்துகிடக்கிறேன். – இவ்வாறு தோழி சொல்லக் கேட்ட தலைவன் பிரிந்து செல்வதை நிறுத்திக் கொண்டான் என்பது கருத்து.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
2
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,        5
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
3
''வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும்'' என்ற சிறு சொற்கு இவட்கே,
4
வசை இல் வெம் போர் வானவன் மறவன்    10
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல,          15
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது.
ஆலம்பேரி சாத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
ஆங்கில விளக்கம்

Agananuru 143

A poem by: Alamberi Sattanar
The text is belongs to second century B.C. or earlier.

குதிரை மலை

No comments:

Post a Comment