Pages

Tuesday, 19 July 2016

நற்றிணை Natrinai 185

கொல்லிப்பாவை
என்று
இக்காலத்தில்
சொல்லப்படும் சிலை
தாங்க முடியாத காம நோயோடு உடலும் உள்ளமும் அழிந்து கலங்குகிறேன். காமம் எல்லை கடந்து நிற்கும் துயரத்தில் உதவுவார் இன்றிக் கிடக்கிறேன். இதனைப் பார்த்துக்கொண்டு அவளை எனக்கு உதவாமல் இருக்கிறாய். அவள் கொல்லிப்பாவை போன்று என்னைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறாள். என்ன செய்வேன் என்று சொல்லிக்கொண்டு தலைவன் கலங்குகிறான்.

தன் பாங்கன் உதவ வேண்டும் என்றோ, 
தலைவியின் தோழி உதவ வேண்டும் என்றோ 
தலைவன் மன்றாடுவதாக இதனை வைத்துக்கொள்ளலாம்.

கொல்லிமலை 
  • சேர அரசன் பொறையனின் புகழ் பாடும் கொல்லிமலை. 
  • பொறையனிடம் பரிசில் பெற்ற பாணர் தாம் பெற்ற குதிரையில் செல்லும்போது, குதிரையின் காலடிக் குளம்பு பதிந்திருக்கும் பாதையில், பரிசில் பெறச் செல்பவர்கள் வழி கண்டு ஏறிச் செல்லும் கொல்லிமலை. 
  • அகன்ற இலைகளுடன் கொத்துக்கொத்தாகப் பூத்துக் கிடக்கும் காந்தள் பூவின் தேனைத் தேன் பறவைகள் கொண்டுபோய் சேர்க்கும் தேன் கூடுகள் தொங்கும் வரைப்பாறைகள் கொண்ட கொல்லிமலை. 
கொல்லிப்பாவை 
  • கொல்லிமலைப் பாறையில் தெய்வ உருவம் எழுதிய பாவை. கலைத்திறன் கொண்ட பாவை. 
  • (வினைமாண் பாவை, புடைப்போவியப் பாவை, பாவை = பெண் ஒருவம்)  


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி
காமம் கைம்மிக கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை தெய்வம் எழுதிய
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே

பாங்கற்குத் தலைவன் சொல்லியது
சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment