Pages

Tuesday, 19 July 2016

நற்றிணை Natrinai 184

காயையோ, கல்லுக்காயையோ
காலால் தெற்றி (தெத்தி, எத்தி)
விளையாடும்
தெற்றி விளையாட்டு
இக்காலத்தில்
சில்லு விளையாட்டு என்பர்
எனக்கு ஒரே ஒரு மகள்தான்.
அவளும் காளை ஒருவனோடு சென்றுவிட்டாள்.
அவன் வில்லேந்திப் போரிடும் கட்டான உடலைப் பெற்றவன்தான்.
என்றாலும் வறண்ட பெருமலைக் காட்டு வழியே அவனுடன் சென்றுவிட்டாள்.
அறிஞர்களே!
நெஞ்சில் தோன்றும் வருத்தத்தைத் (அவலம்) தாங்கிக்கொள் என்கிறீர்கள்.
எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?
நினைக்கும்போதெல்லாம் உள்ளம் வெந்துகொண்டிருக்கிறது.
என் மகள் நொச்சி நிழலில் தெற்றி விளையாடுவாள்.
மாணிக்கக் கல்லில் செய்த பொம்மை நடை கற்றுக்கொண்டு செல்வது போல் நடந்து தெற்றி ஆடுவாள்.
அவள் தெற்றி ஆடிய காயையும், நொச்சியையும் காணும்போது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தேற்றுவோரிடம் செவிலி சொல்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – பாலை

ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

மனை மருட்சி
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment