Pages

Thursday, 2 June 2016

நற்றிணை Natrinai 113

அவள் கலங்கிய பார்வை 
நான் காட்டில் செல்லும்போதும் 
என் கண்ணில் இருந்துகொண்டே இருக்கிறதே, 
என்று பொருள் தேடச் செல்லும் தலைவன் எண்ணுகிறான்.


1

உழைமான்கள் இரத்தி மரத்திலுள்ள காய்களை (இலந்தை) அண்ணாந்து உண்கின்றன. அந்தக் காய்கள் கல்லுப் பாதை நெடுக உதிர்ந்து கிடக்கின்றன.  
2

பெண்ணே! இப்படிப்பட்ட காட்டு வழியே செல்ல எண்ணியுள்ளேன் என்றேன்.

3

உடனே, நெய்தல் மலர் போன்ற அவள் கண்கள் கலங்கின. அதனை அவன் தன் பின்னிய கூந்தலால் மறைத்துக்கொண்டு பெரிதும் வருந்தினாள்.

4

அரசன் உதியன் போரிட்டு வென்றான். 
அந்தப் போர்க்களத்தில் குழல் ஊதுவோர் ‘ஆம்பலம் குழல்’ (ஆம்பல் தண்டில் செய்த குழல்) ஊதினர். 
அந்த ஊதல் ஒலி போல அவள் தேம்பினாள். 
புலம்பும் முகத்தோடு பார்த்தாள். 

அந்தப் பார்வை இப்போதும் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. – இப்படித் தலைவன் கூறுகிறான்.

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் - பாலை
1
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் 
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் 
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் 
பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால் 
2
அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமே 
சேறும் மடந்தை என்றலின் தான் தன் 
3
நெய்தல் உண்கண் பைதல் கூர 
பின் இருங் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து 
4
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் 
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் 
ஆம்பல்அம் குழலின் ஏங்கி 
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே

இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது
இளங்கீரனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

இரத்தி \ இலந்தை

No comments:

Post a Comment