Pages

Thursday, 23 June 2016

முதுமொழிக் காஞ்சி MutuMoliKanji 31-40

சிதடி \ கறையான்
பயனற்றது
துய்த்தல் = பயன்படுத்துதல்,

ஆரவாரம் மிக்க இந்த உலகத்தில் மக்களுக்குப் பயனற்றது எது?

  1. பழிக்கப்படும் செல்வம் வறுமையைக் காட்டிலும் பயனற்றது. 31
  2. அளவுக்கு மிஞ்சிய துணிச்சல் பேடியைக் காட்டிலும் பயனற்றது. 32
  3. பழிபாவம் செய்ய நாணாத வாழ்க்கை பசியோடு கிடப்பதைக் காட்டிலும் பயனற்றது. 33
  4. பிறரைப் பேணாத ஈகை கொடுக்காமல் இருப்பதைக் காட்டிலும் பயனற்றது. 34
  5. செயலாற்றாமல் மேற்கோள் காட்டுதல் அரித்துத் தின்னும் கறையானைக் காட்டிலும் பயனற்றது. 35
  6. ஒப்புக்குப் பொய்யாக வேளாண்மை செய்தல் உயிரைக் கொன்று தின்னும் புலைத்தொழிலைக் காட்டிலும் பயனற்றது. 36
  7. கொடுத்ததை வாங்கிக்கொண்டு உதாசீனப் படுத்தல் கொடுமை செய்வதைக் காட்டிலும் பயனற்றது. 37
  8. அறிவில்லாதவன் துணை தனிமையில் இருப்பதைக் காட்டிலும் பயனற்றது. 38
  9. ஏளனப்படுத்தப்படும் மூப்பு சினம் கொள்ளப்படுவதைக் காட்டிலும் பயனற்றது. 39
  10. தனக்குத் தானே இன்பம் துய்த்தல் தனிமை வாழ்க்கையை காட்டிலும் பயனற்றது. 40

பாடல்

4. துவ்வாப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-

  1. பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது. 31
  2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது. 32
  3. நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது. 33
  4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது. 34
  5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது. 35
  6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது. 36
  7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது. 37
  8. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது. 38
  9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது. 39
  10. தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது. 40

மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி (முதுமொழி = பழமொழி)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி


No comments:

Post a Comment