Pages

Friday, 24 June 2016

ஆட்டுக்கு | காளமேகப்புலவர் KalamekapPulavar 142

சிவபெருமான் முன் காலை நீட்டிக்கொண்டிருக்கும் மாடு
சிவபெருமான் முன் காலை நீட்டலாமா என்று கேட்காதே. ஆடுவதற்கு இசைந்து அம்பலத்தில் ஆடிக்கொண்டிருப்பவர் அம்பலவாணர். அவருக்கு எதிரே திருமால் என்னும் காளைமாடு வடபால் இருக்கும் தன் காலை நீட்டிற்று என்று நீ நினைக்காதே. சிவபெருமான் சினம் கொண்டு முப்புரம் எரித்தவர். அவரைச் சுமந்து அலுத்துப்போன மாட்டுக்குக் கால் நீட்ட என்ன இடம் இருக்கிறது? இதனை முறையிட்டுச் சொல்ல என்ன வழக்கு இருக்கிறது?

பாடல்

ஆட்டுக்கிசைந்த வரம்பல வாணரவர்க் கெதிரே
நீட்டிற்றுமால் வடபாலினிற் காலெனநீ நினையேல்
சூட்டுற்றமுப் புரஞ்செற்றவர் தம்மைச் சுமந்தலுத்த
மாட்டுக்கென்னோ விடங்கானீட்டல் சொல்லவழக் கில்லையே .(142)

ஆட்டுக்கு இசைந்தவர் அம்பலவாணர் அவர்க்கு எதிரே நீட்டிற்று மால் வடபாலினில் கால் என நீ நினையேல் சூட்டுற்ற முப்புரம் செற்றவர் தம்மைச் சுமந்து அலுத்த மாட்டுக்கு என்னோவிடம் கால் நீட்டல் சொல்ல வழக்கு இல்லையே .

இது கட்டளைக் கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும் குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில் தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர் கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள் ‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment