Pages

Sunday, 29 May 2016

பரிபாடல் Paripadal 11

வையை
வையை ஆற்றில் நீராடுவது பற்றி இந்தப் பாடல் கூறுகிறது



மொழிநிலையில் (வாக்கிய அமைப்பில்) பரிந்து கிடப்பது இந்தப் பரிபாடல்
தட்டுத் தடுமாறி நடக்கும் தமிழ்நடை. 
அங்குகிங்கும் பாயும் கருத்தோட்டம். 
இப்படி அமைந்திருப்பதுதான் இந்தப் பாடல்.

நாளும் கோளும் இவ்வாறு அமையும்போது மழை பொழியும் என்று இந்தப் கூறுகிறது.
நடனம் (இக்காலம்)
வையை நீராட்டத்தின்போது இது போன்று மகளிர் நடனமாடினர்
நீச்சல் நடனம் (இக்காலம்)
வையை நீராட்டத்தின்போது இது போன்று மகளிர் நீந்திக்கொண்டு நீரிலும் நடனமாடினர் 
1
மழை பொழிவதற்கான நாள், கோள் நிலைகள் வானில் ஒருங்கியைந்து நின்றன. நிலா வானில் வளர்முகத்தில் இருந்தது.
சைய மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வந்தது.
2
மருதத்துறை (மதுரை) சிறப்பினைத் தோழி கூறுகிறாள். புன்னாகம், சுரபுன்னை, சண்பகம், மா, வாள்வீரம், வேங்கை, கணவிரி, காந்தள், தோன்றி, நீலம் முதலான மலர்கள் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டன. இதனால் மருதத் துறையை மலர்த்துறை என்னலாமா? மலர்ப்போர்வை போர்த்திக்கொண்டு சந்தனமும், தேனும் சுமந்துவரும் ஆற்றை பெண்கள்-படை என்னலாமா? கள் உண்ணும் தொண்டை (மிடறு) என்னலாமா? – என்றெல்லாம் கூறும்படி மருதத்துறை விளங்கிற்று.
3
நிலவின் ஒளி வளர்பிறை காலத்தில் நாளும் நாளும் பெருகுவது போன்று வையை வெள்ளம் நாளும் நாளும் நிலப்பரப்பில் பெருகியது. அதனால் உலகம் பயனைத் துய்த்தது. தேவர்களுக்குப் படையல் உண்டி வழங்கப்பபட்டது. வெள்ளம் வராத காலத்திலும் வையையாறு ஊற்று நீருடன் எட்டுநாள் நிறைந்த நிலாப் போலக் காணப்பட்டதே அன்றி, அம்மாவாசை நிலா போல நீரில்லா வையையை யாரும் கண்டதில்லை.
4
களவு நெறியை விட்டுக் கற்பு நெறியைக் கடைப்பபிடிக்க, பெண் காதலனுடன் செல்வது போல, வையை மலையை விட்டு நிலப்பரப்புக்கு வந்தது. பெண் வீட்டுக்காரர்கள் உடன்போக்கில் ஈடுபட்டுள்ளவர்களை வழிமறித்துப் போர் செய்வது போல மக்கள் வையை வெள்ளத்தில் குதித்து விளையாடினர்.
5
வாள், வேல், கோல் முதலான கருவிகளுடன் மக்கள் சென்றனர். தேர், குதிரை ஆகியவற்றைச் சிலர் வெள்ளத்தில் நடத்தினர். வண்ணநீர் உள்ளே இருக்கும் பந்துகளை மற்றவர்கள் மீது எறிந்து சிலர் விளையாடினர். சிலர் நீர்-எக்கி என்னும் பீச்சுக் குழாயால் நீரை விசிறி அடித்தனர். மகளிர் மைந்தர்களை மாலையால் அடித்தனர். இதனால் வையையாறு ஒரு போர்க்களம் போலக் காட்சி அளித்தது.
6
நீரணி விழா, வெறிமலர் விழா, மலர்மாலை விழா, மணியணி விழா, பாகும் மதுவும் பருகும் விழா, கண்ணழகு காட்டும் காரிகையார் விழா, இசைப்பாட்டு விழா முதலானவற்றால் வையை நீராட்டு விழா வானுலகக் கொண்டாட்டம் போலக் காணப்பட்டது
7
இடி முழங்கும் கார்காலம் நீங்கியது. பனிப்பருவம் தொடங்கியது. வெயில் விரிந்தது. திருவாதிரைத் திருநாள் வந்தது. மறையோதும் விரிநூல் அந்தணர் விழாக் கொண்டாடத் தொடங்கினர். தானம் வாங்கும் புரிநூல் அந்தணர் பொன்னணிகளைத் தானமாகப் பெற்றனர். அதனால் நிலப்பரப்பு வெம்பாத பொலிவு பெற்று விளங்கியது.
8
மகளிர் அழகிய பாடல்களுக்கு நடனம் ஆடினர். புனலாடலில் தேர்ச்சி பெற்ற மகளிர் துறையில் விளையாடும் முறைமையைக் காட்டினர். அதன்படி மற்றவர்கள் ஆடினர். மணல்மேடுகளில் வேதியர் தீ வளர்த்தனர்.
9
மகளிர் சிலர் தம் நனைந்த ஆடைகளை உலர்த்தினர். வையை ஆற்றுக்கு மடையுணவு போல வாழ்த்துப் பாடல்களைப் புலவர்கள் பாடினர். ஆணும் பெண்ணும் கூடும்போது பொய்யாக ஊடல் கொண்டு ஆடினர். ஒருபுறம் தீ எரிந்ததாலும், ஒருபுறம் ஊடிநின்றவர் தவம் செய்பவர் போலக் காணப்பட்டதாலும், தாய்மார் அருகில் நின்றதாலும், வையையில் நிகழ்ந்த மகளிர் ஆட்டம் தைந்நீராடல் போல் காணப்பட்டது.
10
ஒருத்தி தன் மாவடு போன்ற கண்ணழகைக் காட்டினாள். ஒருத்தி மூங்கில் போன்ற தன் தோள் அழகைக் காட்டினாள். ஒருத்தி தன் காதுகளில் குவளை மொட்டுகளைச் சூடிக்கொண்டு நான்கு விழிகளை படைத்தவள் போலத் தோற்றமளித்தாள். ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக்கொண்டாள். ஒருத்தி பவள வளையல்களைத் தன் செறிந்த தொடைகளில் அணிந்துகொண்டாள். ஒருத்தி குவளைப் பூவின் தண்டை நடுவில் வைத்து, கல்லகாரம் என்னும் பூவால் மாலை தொடுத்தாள். ஒருத்தி மற்றொருத்தியை நில்லிகா (நில்) என்பாள் போல் அவள் கழுத்தில் மல்லிகைப் பூமாலையைப் போட்டாள்.  
11
ஒருத்தி மிதவைத் தண்டைப் பற்றிக்கொண்டு நீரில் தாவினாள். அந்தத் தண்டுப் புணையை வெள்ளம் அடித்துச் சென்றது. அதனைப் பிடிக்க அவள் நீரோட்டத்தோடு மிதந்து சென்றாள். அவளைக் காப்பாற்ற ஒருவன் முனைந்தான். முனைந்தவனைக் காப்பாற்ற ஒருத்தி நினைத்தாள். இவளது தாய் தனியே செல்லாதே, தோழிமாரோடு செல் என்று சொல்லித் தட்டுத்தாள். இப்படியெல்லாம் நிகழும்படி வெள்ளம் கருமை நிறத்துடன் (கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருளதொல்காப்பியம் உரியியல்) பாய்ந்தது.
12
வெள்ளை நிற ஆடை உடுத்திக்கொண்டிருபவளைதைந்நீர் ஆடத் தக்கவள் நீஎன்று சிலர் கூறினர். சிலர் தம் காதலர் கழுத்தை அணைத்துக்கொண்டு தழுவினர். அவர்களைவிழுமிய பேறு பெறுகஎன்று சிலர் வாழ்த்தினர். பூவில் விழும் நீர்த்துளி போல் விலகிப் போகாமல் தான் விரும்பும் காதலன் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று சிலர் வேண்டிக்கொண்டனர். கிழவர் கிழவியர் என்று இல்லாமல் ஏழு பருவத்தினரும் இளமை வளம் பெற்று உறவு கொள்வாராக என்று சிலர் பிறரை வாழ்த்தினர்.
13
சிலர் சிலருக்கு வேடிக்கை காட்டினர். கண்டவர் உள்ளத்தைத் தாக்கும் கட்டழகியைப் பாருங்கள். பல அணிகலன்கள் (பண்டாரம்) பூண்டு காமனின் பூப் படை போல விளங்கும் பூமகளைப் பாருங்கள். நெய்யணிந்த கூந்தலில் வண்டினம் யாழிசை போல் ஒலிப்பதைப் பாருங்கள். குரல் என்னும் பண்ணிசை நரம்புக்குக் கிளை நரம்பான உழை என்னும் பண்ணிசை நரம்பைத் தொட்டு யாழில் பாலை இசை மீட்டப்படுவதைக் கேளுங்கள். பண், பண்-திறம், தாளம், கொளை, சீர், முதலான பண்ணிசைப் பாங்குகளைக் கேளுங்கள். இவற்றைப் பொருட்படுத்தாமல், தும்பி வண்டு ஒலிக்கும் இசையைக் கேளுங்கள். சினம் கொள்ளும் சிலரைப் பாருங்கள்.
14
என்றெல்லாம் வையையில் தைந்நீராடல் பற்றிச் சிலவற்றைக் கூட்டிச் சொல்லியுள்ளேன்.
கைக்கிளை என்பது கன்னிமை கனியாத பருவத்தில் நிகழும் காமம்.
இந்தக் காமத்தை இசையுடன் கூட்டிப் பாடுவது பரிபாடல்.
இந்தப் பரிபாடலைப் பாடியுள்ளேன். வையை வெள்ளம் மீண்டும் பெருகவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். – இவ்வாறு புலவர் தன் பாடலைப் பற்றித் தானே சில கூறுகிறார்.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
1
'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி     5
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த         10
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல். 15
2
'வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம் வாள்வீரம்,
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,    20
தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
வயவர் அரி மலர்த் துறை என்கோ?   25
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
பருகு படி மிடறு என்கோ? பெரிய
திருமருத நீர்ப் பூந் துறை.'                      30
3
'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி           35
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;
எண் மதி நிறை, உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
4
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற!    40
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:'
என ஆங்கு   45
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு.
5
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர்       50
குந்தம் ஏந்துவோர், கொள்வார் கோல் கொள்ளக்
கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம்
படைக் கைம்மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு
ஊர்பு உழக்குநரும், கண் ஆரும் சாயற் கழித்
துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,        55
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
பொரு களம் போலும் தகைத்தே பரி கவரும்          60
பாய் தேரான் வையை அகம்.
6
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
புனை வினைப் பொலங் கோதையவரொடு,                        65
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்     70
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை.
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
நீர் ஒவ்வா வையை! நினக்கு.
7
கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து,        75
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என       80
8
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,        85
9
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,                        90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
10
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;     95
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்.  100
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலை வளாய்.                      105
11
தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப; 110
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்;
ஆயத்தில் கூடு' என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே
சேய் உற்ற கார் நீர் வரவு.
12
'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும்,                     115
'"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும்,
'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும்,
'"கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும்,     12 0
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!' என்மாரும்
13
'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்:  125
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை
ஓர்மின்: பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப்
பாடி, கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும்
விரித்து ஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ         130
நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து,
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்
14
என ஆங்கு
இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட         135
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே!  140

வரைவு மலிந்த தோழி கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம் என, வையையை நோக்கித் தலைமகள் கேட்பச் சொல்லியது

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்                 
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்


No comments:

Post a Comment