Pages

Thursday, 26 May 2016

அகநானூறு Agananuru 99

நன்றே கானம்
கண்டிசின் குறுமகள்


காதலியைக் காட்டு வழியில் அழைத்துச் செல்லும் காதலன் சில பசப்பு மொழிகளைச் சொல்லி மகிழ்வூட்டிக்கொண்டு செல்கிறான்.

1
சிவந்த முருக்கம் பூவின் இதழ்கள் வாள் போன்ற வரிகளை உடைய வயமானாகிய புலியின் நகங்கள் போலக் கொட்டிக் கிடப்பதைப் பார். 
செம்மல் = உதிர்ந்த பூக்கள்
2
மதமதக்கும் எழிலுடன் பூண்துணி போட்ட மகளிரின் முலை போலக் கோங்கம் பூக்கள் பூத்துக்கிடப்பதைப் பார்.
முகை = மொட்டு
3
பூ மொட்டு விட்டிருக்கும் அதிரல் கொடி பாதிரி மரத்தின் கிளையில் படர்ந்து, இரண்டும் பூத்திருப்பதைப் பார்.
சினை = கிளை
4
வணங்கத் தக்க அணங்குத் தெய்வம் இருக்கும் நகரில் அந்தப் பூக்களுடன் மராம் மலரும் பூத்திருப்பதைப் பார்.
விராஅய் = விராய் = உரசிக்கொண்டு
5
அம்மம்ம, ஆசை ஆசையாக இருக்கிறது.
சின்னவளே பார்.
வாழி. (கேள்)
தந்தத்தில் பூட்டிய பூண், போரில் சிதைந்துபோன ஆண்யானைகள் பெண்யானைகளுடன் சேர்ந்து, உன் தந்தையின் அரண்மனையில் நிற்பது போல, ஆங்காங்கே குன்றுகள் நிற்பதைப் பார்.   

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
2
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை  5
3
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
4
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
5
நன்றே, கானம்; நயவரும் அம்ம;            10
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!

உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

புலி நகம் போல முருக்கம் பூ

கோங்கம் பூக்கள் 

No comments:

Post a Comment