Pages

Wednesday, 18 May 2016

அகநானூறு Agananuru 86

தமிழர் திருமண முறைமை 


தலைவன் கூறுகிறான். 
  1. உழுந்த வடையுடன் விருந்துணவு படைக்கப்பட்டது. 
  2. பந்தற்கால் நட்டுப் பந்தல் போடப்பட்டது. 
  3. அந்தப் பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டது. 
  4. மனையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. 
  5. மாலைகள் தொங்கவிடப்பட்டன. 
  6. இருள் நீக்கப்பட்டிருந்தது. 
  7. அது வைகறைப் பொழுது. (கவின்பெறு காலை) 
  8. வட்டத்தைக் கொல்லும் பிறை இல்லாமல் முழு வளைவுடன் காணப்பட்ட வெள்ளை-நிலா தோன்றிய காலம் அது. 
  9. அது கெடுதி இல்லாத விழுமிய புகழைக் கொண்ட தலைமையான நாள்.
  • உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை = உழுத்தம்பருப்பை மேலே போட்டு கொழுகொழு களியாக அரைத்து எண்ணெயில் மிதக்கம்படிச் சுட்ட பலகாரம்.  
  • பெருஞ்சோறு = நெல்லஞ்சோற்று விருந்து
  • மிதவை = கூட்டுப் பொறியலுடன் கூடிய குழம்பு வகை
2
  1. நீர் உச்சியில் இருக்கும் நிறைகுடம் கொண்ட பெண்டிர் அழைத்துச் செல்லலப்படும் மணப்பெண்ணுக்கு முன்னே சென்றனர். 
  2. புதுப்பானை ஏந்திய பெண்டிர் மணப்பெண்ணைப் பின்தொடர்ந்து வந்தனர். 
இவை முறை முறையே நடைபெற்றன. பொது வகையான ஆரவாரத்துடன் அவர்கள் மணப்பெண்ணை அழைத்து வந்தனர்.

3
  1. மகனைப் பெற்ற வரிவயிறு கொண்டவரும், தாலி அணிந்தவருமான மகளிர் நான்கு பேர் கூடிநின்று வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். 
  2. ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். 
  3. “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். 
தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. இப்படிச் சடங்குத் திருமணம் நடந்தேறிய பின்னர்,
  • வாலிழை = தூய அணிகலன், தாலி,
  • வாலிழை மகளிர் = கணவனுடன் வாழும் கட்டுக்கழுத்தியர்.
4
’கல்’ என்ற சிரிப்பொலியுடன் மகளிர் சிலர் புகுந்து, “மக்களுடன் பெரிய இல்லக் கிழத்தி ஆவாயாக’ என்று பெற்றவர்கள் கூறினார்கள்” என்று சொல்லிக்கொண்டு திடீர் என்று ஒரே இல்லத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு புகுத்தப்பட்ட அவளுடன் நான் சேர்ந்திருக்கும் வேளையில்,
5
புத்தாடையை வளைத்துத் தன் உடம்பை மூடிக்கொண்டு அவள் ஒடுங்கிக்கொண்டிருந்தாள். அவளை ஒரு பக்கம் அணைத்தேன். பின் தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தைத் திறந்தேன். அவள் அஞ்சினாள். பெருமூச்சு விட்டாள்.
6
  • “யாழ! உன் நெஞ்சில் இருப்பதை ஒளிக்காமல் சொல்” என்றேன். 
  • அவள் அமர்ந்துகொண்டே இனிமையாகப் புன்னகை பூத்தாள். 
  • நான் பின்னும் அதே கேள்வியைக் கேட்டேன். 
  • அவள் காதுகளில் இருந்த செவ்விய குழையணி ஆடிற்று. (ஒப்புதல் தரும் தலையசைவு அது) 
  • அவளுக்கு நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி. 
  • முகம் கொடுத்து என்னைப் பார்த்தாள். 
  • திடீரென என் காலில் விழுந்து வணங்கினாள்.
7
  • அவளுக்குப் பெண்மானைப் போன்ற மடமையான (மருண்ட) பார்வை. 
  • மதமதப்பு ஊட்டும் பார்வை. 
  • சீவி முடித்து ஒடுங்கிக் கிடக்கும் கூந்தல். 
  • மாந்தளிர் போன்ற மேனி. 
கேட்கவேண்டுமா இன்பத்தை?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – மருதம்
1
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;      5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
2
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,          10
3
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி    15
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
4
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
''பேர் இற்கிழத்தி ஆக'' எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,    20
5
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, ''யாழ நின்
6
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை'' என,           25
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
7
மடம் கொள் மதைஇய நோக்கின்,         30
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.

வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉம் ஆம்,
நல்லாவூர் கிழார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
உழுந்து வடை

17 comments:

  1. மிக அழகான வருணை 👌🌹

    ReplyDelete
    Replies
    1. நல்லாவூர் கிழார் புலவர் தமிழ் நலம்

      Delete
  2. Nalama pitha pithaathe Malama pitha pithaathe

    ReplyDelete
  3. படித்துச் சுவைத்த தெய்வங்களை வணங்குகிறேன்

    ReplyDelete
  4. அக வாழ்க்கையை பிறருக்கு தெரிவிக்க கூடாது. ஆனால் இப்பாடலில் தலைவன் தனது அக வாழ்க்கையை தோழிக்கு தெரிவிக்கிறானே. இது மீறல் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. அகத்திணை, அகப்பொருள் என்பது என்ன? புறத்தே பிறர் காணுமாறு நிகழாத ஆண்-பெண் உறவு தொடர்பான செய்தி.

      Delete
    2. இதில் அவன் சொன்னது, அவள் சொன்னது, தோழி சொன்னது, கண்டோர் காதலரைப் பற்றிச் சொன்னது என்று இருக்குமே அல்லாமல், இன்னார் (பாரி, கந்தன்) செய்தார் என்று இயற்பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது.

      Delete