Pages

Saturday, 7 May 2016

அகநானூறு Agananuru 77

கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்கள்


கண்ணீர் வடிக்கும் இவளை விட்டுவிட்டு, பொருள் தேடிவர, நெஞ்சே, உன்னுடன் வரமாட்டேன், என்கிறான் தலைவன்.
1
என் நெஞ்சே! என் பின் நின்று என்னைத் துரத்துகின்றாய். இவள் நல்ல நெற்றியில் பசப்பு ஏறினால் என்ன? ஆள்வினையால் பொருளைத் தேடுதல் மேலானது என்று துரத்துகிறாய். இது நல்லதுதான். என்றாலும் துன்பமானது.  
2
  • எங்கும் ஒரே வெப்பம். வானம் இடிக்கிறது. ஆனால் மழை இல்லை. ஊரில் இருந்த மக்கள் குடிபெயர்ந்து போய்விட்டனர். பாழ் பட்டுக் கிடக்கும் அந்த முதுமையான பாழ் மன்றத்தில் கழுகு இறந்தவரின் குடலைப் பிடுங்கி இழுக்கிறது.
  • பகைவர்களைப் கொன்று போரில் வெற்றி கண்ட வீரன் மாண்டு கிடப்பானின் குடலை ஈர்க்கிறது.  
  • அக்காலத்தில் யாரை ஊர்த்தலைவர் ஆக்குவது என்று என்று குடவோலை முறையில் தேர்தெடுப்பர்.  ஊரிலுள்ள ஒவ்வொருவரையும் சுட்டும் பெயர்கள் எழுதிய ஓலை குடத்தில் இடப்பட்டுப் பாதுகாப்பாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கட்டை அவிழ்த்து ஒரு ஓலையை எடுத்து அதில் எழுதப்பட்டுள்ளவரை ஊர்த்தலைவர் ஆக்குவர்.
  • பானையில் உள்ள கட்டை அவிழ்த்து ஒரு ஓலையை அவர்கள் எடுப்பது போலக் கழுகு வழிப்பறியில் இறந்தவன் குடலைப் பிடுங்கி ஈர்க்கும்.
3
கழுகு குடலை ஈர்க்கும் அந்தக் கல்லுப்பாதை ஆங்காங்கே பிரிந்து செல்லும் கவலைப்பாதை கொண்டது. வழியில் உள்ள ஊர்களில் இத்தி மரம் புள்ளி புள்ளியான நிழல் கொண்டதாய் இருக்கும். அந்த நிழலிலும் வெயில்-காற்று வீசும். அங்கு இருள் வரும் மாலை வேளையிலும் அதன் வெப்பத் தாக்கம் இருக்கும்.
4
  • வானவன் என்று போற்றப்படும் சேர மன்னனின் படைத்தலைவன் பிட்டன். அவன் வணங்கும் வில்லைத் தன் வலிமை மிக்க கையில் வைத்திருப்பவன். ஆனா நறவு என்பது அருந்தாத நறவு. அதாவது நறவு என்னும் ஊர். நறவூரில் வாழ்ந்தவன் அந்தப் பிட்டன். அவன் பகைமன்னர்களுக்கு எதிராக வேலை உயர்த்துவான். அந்த வேல் திருந்திய இலைபோல் இருக்கும். ஆனால் பகைவர்களைப் பெரிதும் துன்புறுத்தும்.
  • பிட்டன் கையிலுள்ள வேல் போல, கண்ணீர் சிந்தும் இவளது கண்கள் என்னைத் துன்புறுத்துகின்றன.
  • எனவே, நெஞ்சே, இவளை விட்டுவிட்டு வரமாட்டேன்.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
''நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று'' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
2
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்     5
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,       10
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
3
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
4
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,              15
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.

தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.
மருதன் இள நாகனார் பாடல்


கி.மு. காலத்துப் பாடல்
குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தல் - ஒரு கற்பனை
பானையின் கட்டைப் பிரித்துக் குடத்திலுள்ள ஓலை ஒன்றை எடுத்தல் - வரலாற்றுச் சான்று 
குடவோலை முறைத் தேர்வு

இது புகழூர் ஆறுநாட்டான் மலையில் உள்ள கல்வெட்டு
தமிழி (தமிழ்ப்பிராமி) எழுத்திலுள்ள கல்வெட்டு
காலம் - கிறித்து பிறப்பினை ஒட்டியது
கோ ஆதன் செல்லிரும்பொறை
இவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை
இவன் மகன் இளஞ்சேரல் இரும்பொறை
ஆகியோரின் கால்வழியை விளக்குவது
*
இங்குள்ள சமணர் படுக்கைகளின் தலைமாட்டில்
பிட்டன்
கொற்றன்
ஆகியோரின் பெயர்கள்  அதே தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment