Pages

Friday, 6 May 2016

அகநானூறு Agananuru 76

ஆட்டனத்தியை இழுத்துச் சென்ற காவிரி போல்


பரத்தை தருக்கோடு பேசுகிறாள்.
1
ஊரன் மேளதாளத்துடன் எம் சேரிக்கு வந்தான்.
2
அஃதை வள்ளல் கள், களிறு, அணிகலன் முதலானவற்றை கூத்தாடும் பொருநர் கலைஞர்களுக்குத் தன் நாளவையில் இருந்துகொண்டு வழங்குவான். பொருநர் அவன் நாளவைக்குள் புகும்போது தம் பறையை முழக்குவர். அந்தப் பறை முழக்கம் போல ஊரனின் பெண்கள் என்னைத் தாக்கிப் பேசுகின்றனராம். அது இருக்கட்டும்.
3
இடுப்பிலே கச்சு, காலிலே கழல், மார்பிலே மலர்மாலை ஆகியவற்றை எடுப்பாக அணிந்துகொண்டு ஆட்டனத்தி காவிரியாற்றில் நீச்சல்-நடனம் ஆடிக்காட்டினான். கிழக்குப்பக்கமாகப் பாயும் காவிரியாற்று வெள்ளம் அவனை அடித்துச் சென்றது. ஆட்டனத்தியை ஆதிமந்தி காதலித்தாள். (ஆதிமந்தி அரசன் கரிகாலனின் மகள்). காதலனைத் தேடிக்கொண்டு ஆதிமந்தி காவியாற்றங்கரை வழியாகவே வந்தாள். “சுருள் முடியுடன் இருக்கும் என் பொருநனைக் கண்டீரோ” என்று கூவிக்கொண்டே வருத்தத்துடன் வந்தாள்.
4
ஆதிமந்தி போல ஊரனின் மனைவிமார் தேடிக்கொண்டு அலையும்படி, காவிரியாற்றைப் போல ஊரனை இழுத்துச்சென்று மறைத்து வைத்துக்கொள்ள நான் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கிறேன்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – மருதம்
1
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
2
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,        5
கழறுப என்ப, அவன் பெண்டிர்; ''அந்தில்,
3
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
ஆதிமந்தி பேதுற்று இனைய,     10
4
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல,
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.

''தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்'' என்று கழறக் கேட்ட பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
ஆங்கிலத்தில் இதன் விளக்கம்

நீச்சல் நடனம்
இப்படி ஆதிமந்தியின் காதலன் ஆட்டனத்தி கழார்யாத்ற்றுதுறைக் காவிரியாற்று மடுவில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே நீச்சல் நடனம் ஆடிக் காட்டினான்

No comments:

Post a Comment