காம நோயால் வருந்தும் தலைவி தன் தோழியிடம் கூறும் சொற்கள் இவை.
காம நோய் கலக்கித் தாங்கும் வலிமை இழந்த
காலத்தில் தன் காம உணர்வை வெளிப்படையாக எடுத்துரைத்தல் ஆண்மகனுக்கு முடியும். 
நானோ
பெண்மைத் தன்மை தடுப்பதால் நுட்பமாகப் பொறுத்துக்கொண்டிருக்கிறேன். 
நகை செய்வதில் கலைத்திறம்
பெற்ற கம்மியன் திருத்தமாகக் கழுவாத முத்துப்போலக் கிடக்கிறேன். 
அவனோ கழுவாத முத்துப்
போலப் புன்னைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் கடற்கரைச் சேர்ப்பு நிலத் தலைவன். 
தோழி!
அவன் என்ன மகன்? 
தன்மீது ஆசை கொண்டு மார்பு துன்புற்றுத் துடிக்கும் என்னை அறியாதவனாக
இருக்கிறானே!  
(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 94. நெய்தல் 
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்  5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!
தலைமகன் சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.
இளந்திரையனார் பாடல்
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:
Post a Comment