Pages

Monday 13 October 2014

புறநானூறு 42 Purananuru 42

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


இடைவிடாத கொடையும், போருமாகவே இருக்கும் தலைவ!
  • உன் யானையோ மலை போல் உள்ளது.
  • உன் படையோ கடல் போல் முழங்குகிறது.
  • உன் வேலோ மின்னிக்கொண்டே இருக்கிறது.
  • இதனால் உலகின் அரசர்களெல்லாம் நடுங்குகின்றனர்.
இது குற்றமற்ற செயல் அன்று.
இது உனக்குப் புதியதும் அன்று.

உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப் 
பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக.

போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் 
புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போல 
நாட்டில் செங்கோலாட்சி புரிவாயாக.

புன்செய் நில நாட்டின்மீது (பாண்டிய நாட்டின்மீது
போர் தொடுக்க வேண்டாம்.

உன் நாடு வளமான நாடு.

இதன் மடைநீரில் அரித்து நீ கொள்ளும் வாளை
உழும்போது புரளும் ஆமை
கரும்பில் தொடுத்திருக்கும் தேன்
துறையில் மகளிர் பறித்த குவளை 

ஆகியவற்றைப் புன்செய் நில மக்களுக்கு 
விருந்தாகத் தருபவர்கள் உன் நாட்டு மக்கள்

அந்த நாட்டின்மீது நீ போர் தொடுக்கிறாய்.

மலையிலிருந்து நிலத்தில் பாயும் ஆறு போலப் 
புலவர்கள் உன்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

நீயோ கூற்றுவன் போல இருபெரு வேந்தர்களின் 
மண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.

பாடல்

ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின்,      5
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே;
தண் புனல் பூசல் அல்லது, நொந்து,
'களைக, வாழி, வளவ!' என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலி புறங்காக்கும் குருளை போல,  10
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப,
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர்
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை    15
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்,
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி,
நில வரை இழிதரும் பல் யாறு போல,     20
புலவர் எல்லாம் நின் நோக்கினரே;
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.
  • திணை வாகை
  • துறை அரசவாகை.
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 
  • இடைக்காடனார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

கரும்பில் கொண்ட தேன்



No comments:

Post a Comment