சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
எமன்கூட காலம் வரும்வரையில் காத்திருக்கும்.
உன் படையோ, காலம் பார்க்காமல்
சென்று வெல்லும்.
உன் பகைவர் தீய கனாக் காணும்படி
நீ வெல்வாய்.
தீக் கனா
- எட்டுத் திசைகளிலும் எரிமீன் விழுதல்
- பச்சை மரம் பற்றி எறிதல்
- சூரியன் விழுங்கல்
- அச்சம் தரும் பறவைகள் ஒலித்தல்
- வாயிலுள்ள பல் நிலத்தில் விழுதல்
- தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
- யானை அடங்காமை
- மேலாடை கீழே விழுதல்
- அரியணை கவிழ்தல்
இப்படியெல்லாம் கனவு காணும்படி
நனவிலேயே
போரிடும் வல்லமை உடையவன் நீ.
இப்படி நீ வருவதைப் பார்த்த பகைவர்
தன் மகனை முத்தமிட்டுக்கொண்டு
மனைவி முன் தன் கண் கலங்குவதை மறைத்துக்கொண்டு நிற்பர்.
காற்றும் நெருப்பும் வீசுவது போல
பகை நாட்டின்மீது நீ செல்வாய்.
பாடல்
காலனும் காலம் பார்க்கும்; பாராது,
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், 5
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்,
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும், காழகம்
நீப்பவும்,
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், 10
கனவின் அரியன காணா, நனவில்
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்,
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு 15
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே.
- திணை வஞ்சி;
- துறை கொற்றவள்ளை.
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக்
- கோவூர் கிழார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment