Pages

Saturday, 13 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 368

368. மருதம்

மெல்லியலோயே! மெல்லியலோயே!
நல் நாண் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின்,
சொல்ல கிற்றா மெல்லியலோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே,
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
இடிகரைப் பெரு மரம் போல,
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.

இடிகரைப் பெரு மரம்

வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது.

நக்கீரர் பாடல்

மிக மிக மென்மையானவளே! என் நாணத்தை விட்டு அவனோடு சேர்ந்த என் மாமை நிறத்தை வலிமையாகப் பேணிக்கொள், (அவனை நினைத்து பசலை பாய வேண்டாம்), என்று ஆறுதல் சொல்வதல்லது வேறொன்றும் சொல்ல முடியாத மென்மையானவளே! சிறியவர்களும் பெரியவர்களும் வாழும் இந்த ஊர் ஒருபுறம் என்னை இடிக்கிறது. அவன் வராமல் என்னைத் துன்புறுத்துகிறான். இதற்கு இடையில் ஒரு நாளும் குறையாத வெள்ளத்தால் இடிக்கப்படும் கரையில் இருக்கும் பெரிய மரம் போல நான் அவரை அடிக்கடித் தழுவிக்கொண்டிருக்கிறேன்.   

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment