Pages

Thursday, 28 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 309


309. மருதம்

கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
''கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்'' என்னாது''
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும!
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.

பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

உறையூர்ச் சல்லியன் குமாரன்

(படம் – குளத்தில் நெய்தல்)

பெரும! உன் ஊரிலுள்ள வயலில் களை பறிக்கும் கைவினை மாந்தர் தம் பணியைச் செய்து முடிப்பதற்காக வண்டு உண்ணும்படி மலர்ந்த நெய்தல் பூக்களைக் களைந்து அதன் வாசம் வரப்பு மண்ணில் கீழே ஊறும்படி எறிந்து அதனை வாடவிட்டாலும் “இவர்கள் கொடியவர்கள், இவர்கள் நிலத்தை விட்டுவிட்டு வேறு நிலத்துக்குப் போய்விடுவோம்” என்று எண்ணாமல் அதே நிலத்தில் பூக்கும் நெய்தல் போல, நீ எனக்குக் கொடுமைகள் செய்தாலும் நீ இல்லாமல் நான் வாழமாட்டேன்.
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment