Pages

Sunday, 2 November 2014

புறநானூறு 70 Purananuru 70

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


பாண! 

கிள்ளிவளவன் புகழைப் பாடும் புலவனாகச் சென்றால் 
விறகு வெட்டி பொன் முடிச்சு பெற்றதினும் 
மேலான அவன் கொடையினைப் பெறலாம்.

பாணன் 

தேன் போல் இசை ஒழுகும்படி சீறியாழ் மீட்டுபவன். 
குளத்து ஆமையைக் கயிற்றில் கோத்துக் கட்டியது போன்ற 
கிணையில் இசை முழக்குபவன். 

“இனிய காண்க! இவண் தணிக” 
இனிமை பொங்கட்டும்! அமைதி நிலவட்டும் 
என்று பாடிக்கொண்டு முழக்குபவன்.

கிள்ளிவளவன் நாடு 

குளத்து நீர் தை மாதத்தில் மொள்ள மொள்ளக் குறையாதது போல் 
செல்வம் நிறைந்த நாடு. 

உணவு சமைக்கும் தீயைத் தவிர 
பகைமன்னன் சுடும் தீயை அறியாத நாடு. 

உடலை வளர்க்கும் உணவு-மருந்து, 
பிணிபோக்கும் மருந்து 
என்னும் இரு மருந்தினையும் விளைவிக்கும் நாடு. 

இந்த நல்ல நாட்டின் அரசன் கிள்ளிவளவன்.

வள்ளல் பண்ணன் வாழும் சிறுகுடியில் 
பூத்த வண்டு மொய்க்கும் ஆம்பல் பூவையும், 
பாதிரிப் பூவையும் சூடிக்கொண்டிருக்கும் 
மகிழ்ச்சியில் திளைக்கும் உன் விறலியோடு 
கிள்ளிவளவனிடம் சென்றால் 
விறகுவெட்டி பொன்முடிச்சு பெற்றதனின் மேலான செல்வம் 
பெறலாம்.
கிள்ளிவளவன் தாள் வாழ்க.

பாடல்

தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
வினவல் ஆனா முது வாய் இரவல!                    5
தைஇத் திங்கள் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,                  10
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்    15
செல்வைஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

திணை – பாடாண்;  
துறை - பாணாற்றுப்படை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் 
கோவூர் கிழார் 
பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

அக்காலப் பாணரின் 
இக்காலக் கலைஞர்



No comments:

Post a Comment