Pages

Saturday, 1 November 2014

புறநானூறு 68 Purananuru 68

சோழன் நலங்கிள்ளி


பாண! 

உன் யாழிசையைச் சிலர் மட்டுமே கேட்கிறார்கள் என்று 
நொந்து நொந்து இங்கே என்ன செய்கிறாய்? 

காவிரி புரக்கும் நாட்டு அரசன் உறையூரில் இருக்கிறான். 
அவனிடம் சென்றால் 
மற்றவர் வாசலுக்குச் சென்று காத்திருக்கா வண்ணம் 
கொடை நல்குவான். 
சென்று பெறுக.

பாணன் தோற்றம் 

தோல் உரித்த உடும்பு கிடப்பது போல 
எலும்பு தோன்றும் உடலுடன் 
பசியுடன் காணப்பட்டான். 

கேள்வி என்பது யாழ். 
அதனை அவன் மீட்டியபோது சிலர் மட்டுமே  கேட்டனர்.

அரசன் இருப்பு 

செம்புள்ளிகள் இட்டு, 
அணிகலன் பூண்ட அழகிய மார்பினைக் கொண்டவன். 

மகளிரின் மென்மைக்கு வணங்குவான். 
ஆண்களை அடக்கும் பெருமை கொண்டவன் அந்த நெடுந்தகை. 

பிறந்த குழந்தைக்குச் சுரக்கும் தாயின் முலை போல 
மரம் சாய்க்கும் வெள்ளம் வரும் 
காவிரி ஊட்டும் நாட்டை உடையவன். 

போர் மறவர் 

நாட்டிலே உட்பூசல் எனக் காரணம் காட்டியும்
புள் நிமித்தம் வெற்றிக்குப் பொருத்தமாக அமையவில்லை எனக் கூறியும் 
அரசன் போருக்கு அனுப்பாததால் செத்தாவது ஒழிவோம் 
என்று திணவெடுக்கும் தோளைத் தட்டிக் காட்டுபவர்கள்.

உறையூர் 

போர்ப்பறை முழக்கம் இல்லாமல் 
தேர் செல்லும் வழியில் 
கை கவித்துத் கள் பருகுவோர் உகுத்த கள்ளின்மீது 
யானை நடந்து சேறாகிக் கிடக்கும் தெருக்களைக் கொண்டது. 

அங்கு மகிழ்ச்சிப் பெருக்கில் முழங்கும் 
முழவின் ஓசையைக் கேட்டுக்கொண்டு அரசன் இருப்பான்.
அவனிடம் சென்று உன் வறுமையைப் போக்கிக்கொள்க.

பாடல்

உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து,
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து   5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்,     10
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப,
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி,
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த    15
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்;
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே.

திணை பாடாண்
துறை பாணாற்றுப்படை.
சோழன் நலங்கிள்ளியைக் 
கோவூர் கிழார் 
பாடியது.


காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

தோல் உரித்த ஓணான்


தோல் உரித்த உடும்பின் தோற்றம் போல்
பாணன் எலும்பும் தோலுமாகக் காணப்பட்டானாம்

    No comments:

    Post a Comment