Pages

Friday, 31 October 2014

புறநானூறு – நூல் குறிப்பு

புறநானூறு என்பது ஒரு தொகுப்பு நூல். 
புறம், புறப்பாட்டு என்னும் பெயர்களாலும் 
இந்த நூல் குறிப்பிடப் பெறுகிறது. 

தலைமக்களின் வாழ்வியலைக் கூறும் பாடல்கள் இதில் உள்ளன. 

பாடல்கள் ஆசிரியப்பா என்னும் யாப்பு வகையைச் சேர்ந்தவை. 

நூல் தொகுக்கப்பட்ட காலத்ததான கடவுள் வாழ்த்துப் பாடல் 
உள்பட 400 பாடல்கள் இதில் உள்ளன.

இவற்றில் 267, 268 எண் கொண்ட பாடல்கள் கிடைக்கவில்லை. 
266 ஆம் பாடலுக்குப் பின்னர் வரும் பாடல்கள் சிலவற்றில் 
அடிகளும், சீர்களும் சிதைந்துள்ளன.

இந்தப் பாடல்களைத் தொகுத்தவர், 
தொகுப்பித்தவர் பற்றிய செய்திகள் தெரியவில்லை. 

தொகுத்தவர் ஏதோ ஒரு முறைமையைப் பின்பற்றியுள்ளார். 

மூவேந்தர்கள், 
குறுநில மன்னர்கள், தலைமக்கள் 

என்ற முறைமை பின்பற்றப்பட்டு 
விடுபட்டுள்ள பாடல்கள் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. 

எனினும் சில பாடல்கள் இடையிடையே கோக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை. 

அக்கால வரலாறு, பண்பாடு 
முதலானவற்றை அறிய உதவும் கருவூலமாக 
இந்தப் பாடல்கள் உள்ளன.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடலின் திணை, துறை 
பற்றிய இலக்கணக் குறிப்புகள் உள்ளன. 

இவற்றில் சில பொருத்தமற்றவை என்பது சிலர் கருத்து. 

(தொல்காப்பியம் புறத்திணையியல் நூற்பா 35  உரையில் 
நச்சினார்கினியார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

5, 8, 21 ஆம் புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள 
திணை, துறைகளை இவர் மறுத்துள்ளார்).

பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் தரப்பட்டுள்ள நிகழ்வுக் குறிப்புகளை 
யாரும் மறுக்கவில்லை.

இந்நூலின் முதல் 266 பாடல்களுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. 
அந்த உரையில் 
அதற்கு முந்திய உரை இருந்தது பற்றிய குறிப்புகள் வருகின்றன. 
அந்த உரை கிடைக்கவில்லை.


9 comments:

  1. நன்றி என்ற ஒற்றைச் சொல் கூறி முடித்துவிட முடியாது. இணையத்தில் இப்படியொரு பொக்கிஷத்தை உருவாக்கி வைத்திருப்பதற்காக தங்கள் தாள் பணிந்து வணங்குகிறேன்.
    சுசரிதா

    ReplyDelete
  2. sir,
    புறநானூற்றில் கூறாத திணை எது?

    ReplyDelete
    Replies
    1. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்
      இலக்கியத்தில் இல்லாத செய்திகளைக் கற்பனையில் இலக்கணம் படைத்துக்கொண்டு
      அந்த இலக்கணத்துக்கு மேற்கோளாக எடுத்துக்காடுப் பாடல்களையும் பாடி புறப்பொருள் வெண்பாமாலை உருவாக்கப்பட்டுள்ளது
      திணை - என்பது இலக்கணம்
      இலக்கணம் மொழியை அறிய உதவும் ஒரு கருவி
      விதை முளைக்கக் கருவி வேண்டாம்
      களை எடுக்கவே கருவி வேண்டும்

      Delete
    2. கரந்தை, காஞ்சி, கைக்கிளை, தும்பை, நொச்சி, பாடாண், பெருந்திணை, பொதுவியல், வஞ்சி, வாகை, வெட்சி - ஆகிய திணைப்பாடல்களும், திணைக்குறிப்பு மறைந்துபோன 10 பாடல்களும் புறநானூற்றில் உள்ளன.

      Delete
  3. மன நிறைவு....

    ReplyDelete
  4. அடி எல்லை என்ன ஐயா?

    ReplyDelete
    Replies
    1. சில பாடல்கள் இல்லை. சில பாடல்களில் அடிகள் சிதைந்து போயின. எனவே புறநூனூற்றுப் பாடல்களுக்கு அடி எல்லை காட்ட முடியாது.

      Delete