சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
மலை போன்ற வாலிபக் களிற்றின் மேல்
வானத்தைத் துடைப்பது போன்ற கொடியுடன்
கூடிய யானைப்படையை உடையவன்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
வெற்றி வேந்தனே!
நீ மாறுபட்டு நோக்கும் இடம் தீப் பற்றி எரியும்.
விரும்பி நோக்கும் இடம் பொன் பூக்கும்.
அதனால் நீ ஞாயிற்றில் நிலவையும்,
நிலாவில் வெயிலையும்
விளைவிக்கும் ஆற்றலை உடையவன்.
உன் நிழலிலே பிறந்து,
உன் நிழலிலே வளரும் என் அளவு எத்துணை?
பொன்னுலகம் என்னும் மேலுலக வாழ்வு
இவ்வுலகில் செய்யும் நல்வினையால்
இறந்தபின் கிடைக்குமாம்.
அங்கே
உடையவர் ஈதலும்,
இல்லாதவர் இரத்தலும் இல்லை.
இந்த இன்பத்துடன்
உன் குடை நிழல்
ஆண்டு சென்று நுகரும் பொன்னுலக இன்பத்தை
ஈண்டே பெறவைப்பதால்
புலவர்கள் உன் நாட்டையே நினைக்கின்றனர்.
நீ பெற்றுவிடுவாய் என்று எண்ணிப்
பகைவர் நாட்டையும் உன்னிடையது என்றே உண்ணுகின்றனர்.
பாடல்
வரை புரையும் மழ களிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, 5
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, 10
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப்
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, 15
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே.
- திணை பாடாண் திணை;
- துறை இயன்மொழி.
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு
- ஆவூர் மூலங்கிழார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment