Pages

Friday, 10 October 2014

புறநானூறு 34 Purananuru 34

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


வழுவாய்

பசுவின் முலையை அறுத்தல் (உழவுக்குப் பயன்படுத்த)
தாலி அணிந்த பெண்ணின் கருவைச் சிதைத்தல்
பார்ப்பானை அடித்தல் 
இவை பாவச் செயல்கள்.

இந்தப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம்
ஆனால் 
உலகமே கைவிட்டுப் போவதாயினும் 
நன்றி மறந்தவனுக்கு 
அப் பாவத்திலிருந்து தப்புவதற்கு 
வேறு வழியே இல்லை 
என்று அறநூல் பாடுகிறது

எந்நன்றி கொன்றாற்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

அறம் எனப் புலவர் ஆலத்தூர் கிழார் சுட்டுவது திருக்குறள்

ஆயிழை கணவ!

எம் அரசன் வாழ்க என்று உன்னை நான் பாடாவிட்டால் 
எனக்குப் பொழுது போகாது
நீ செய்திருக்கும் உதவி அத்துணைப் பெரியது.
அமலை வெண்சோறு

பால் ஊற்றிப் பொங்கிய வரகரிசிப் பொங்கலைத் 
தேனில் தொட்டுக்கொண்டு 
முயல் கறியோடு 
இரத்தி(இற்றி)மர நிழலில் இருந்துகொண்டு 
காலை, மாலை ஆகிய இரு அந்திப் பொழுதிலும் 
குடும்பத்தாரோடு சேர்ந்து உண்ணுமாறு 
உன் செல்வம் அனைத்தையும் 
உனக்காக மறைத்து வைத்துக்கொள்ளாமல் 
இனிமையாக் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு 
பாணர்களுக்கு அமலை வெண்சோறு வழங்கியவன் நீ.
நான் உனக்கு அடைக்கலம்.

இந்த உலகத்தில் 
சான்றோர் செய்த நன்று ஒன்று இருந்தால்

வங்கக் கடலிலிருந்து சென்று 
இமயமலையில் தங்கித் திரும்பி 
இடி முழக்கத்துடன் பொழியும் 
கீழைக்காற்று மழைத்துளியைக் காட்டிலும் நீ
பல்லாண்டு காலம் வாழ்வாயாக.

பாடல்

'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்            5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்                      
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,       10
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு     
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், 15
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,  
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,     20
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!
  • திணை பாடாண் திணை
  • துறை இயன்மொழி.
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 
  • ஆலத்தூர் கிழார் பாடியது.
காலம் : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)



2 comments:

  1. குரவர்தப்பிய கொடுமையோர்க்கும்( பார்ப்பான் இல்லை)

    ReplyDelete
    Replies
    1. "குரவர்" என்பது [பார்ப்பார்] என்பதற்கு மாற்றுப் பாடம் ஆயின் தங்கள் கருத்து பாராட்டத் தக்கது.

      குரவர் = தாய் தந்தையர்

      Delete