Pages

Thursday, 9 October 2014

புறநானூறு 33 Purananuru 33

சோழன் நலங்கிள்ளி


தென்னம்பொருப்பு என்பது பொதியமலை
பொதியமலை அரசன் பாண்டியன்
அவன் நாட்டில் குளம் என்னும் சொல்லால் 
இப்பாடலில் குறிப்பிடப்படும் இடம் 
இக்காலத்தில் பெருங்குளம் என்னும் ஊராகும்.

இவ்வூர் மக்கள் உழவர்
இவர்களின் பெருங்குடி மகள் 
நெல்லைப் பண்ட மாற்றாகத் தருவாளாம்

வேட்டுவன் நாய்த் துணையுடன் வேட்டையாடிக் கொண்டுவந்த 
மான் தசையைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வானாம்

ஆயர் குடிமகள் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு 
நெல்லைப் பெற்றுச் செல்வாளாம்.
இந்த ஊரில் ஏழெயில் கதவம் என்னும் கோட்டை இருந்தது

இதனைக் கைப்பற்றிய சோழன் நலங்கிள்ளி 
அதன் கதவில் தன் புலிச்சின்னத்தைப் பொறித்தானாம். 
புலிச்சின்னம் பிளந்த வாயைக் கொண்டிருந்தது.
பாசறைக் காட்சி

பாடுபவர்கள் 
அரசன் பிற நாட்டைக் கைப்பற்றிய 
வஞ்சி வெற்றியைப் பாடிக்கொண்டிருந்தனர்.

படைவீரர்கள் பாசறைத் தெருவில் பொலிவுடன் இருந்தனர்.

பச்சிலை வைத்துக் கட்டிய மாலைப்பந்து போன்ற 
கறிச்சோற்றுக் கவளங்களை 
அரசன் பாணர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தான்.

இது போர்ப் பாசறையில் நிகழ்ந்தது.
தலைநகர்க் காட்சி

கைத்திறன் கொண்ட கலைஞன் 
தைத்து உருவாக்கிய அல்லிப்பாவை 
ஆடுவது போல, 
காம உணர்வோடு இருவர் ஆடுவது அல்லாமல் 
நள்ளிரவில் தனிமகன் நடமாட்டம் இல்லாத 
மணல் ஒதுக்குப் பூம்பள்ளியில் காம இருவர் ஆடினர்

இந்தப் பூம்பள்ளி மாடங்களின் வாயில்தோறும் 
ஆட்டுக்கறி உணவு படைக்கப்பட்டது.
இப்படி அரசன் விழா நடைபெற்றது.

பாடல்

கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்             
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்               5
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்,
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;         
பாடுநர் வஞ்சி பாட, படையோர்            10
தாது எரு மறுகின் பாசறை பொலிய,
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்து கண்டன்ன
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்             
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை                15
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப,
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின்,         
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி           20
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப,
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
  • திணை வாகை
  • துறை அரச வாகை.
  • சோழன் நலங்கிள்ளியைக்  
  • கோவூர் கிழார் பாடியது.
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

வில்
புலி (பேழ்வாய் உழுவை)
கயல் (இணை கயல்)
ஆகியவை முறையே
சேரர், சோழர், பாண்டியர் சின்னங்கள்
சோழன் நலங்கிள்ளி
தன் பேழ்வாய் உழுவைச் சின்னத்தைப்
பாண்டியனின் 
'ஏழெயில் கதவம்' கோட்டையில்
பொறித்தான்
*
பேழ்வாய் உழுவைச் சின்னம்
நாணயத்தின் நடுவில்
உள்ளது
*
இது
இராஜேந்திர சோழன் நாணயம்
படம்
*
உழுவைச் சின்னம்
காட்ட இங்குப் பதிவேற்றப்பட்டுள்ளது
*



3 comments:

  1. இது ‘கங்கைகொண்ட சோள’ என்று ( நாகரி எழுத்தில்) உள்ள இராசேந்திரசோழன் காசு

    ReplyDelete
  2. ஆயின் நன்று. சரியான செய்தியைத் தங்களைப் போன்ற கல்வெட்டியல் வல்லுநர்கள்தான் தரவேண்டும். பாராட்டுகிறேன். தொடர்ந்து உதவுங்கள்.

    ReplyDelete
  3. திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி.

    ReplyDelete