Pages

Friday, 22 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 17

பக்கம்  15

அல்லி தன் மகன் புலந்திரனுக்கு விலங்கு போடச் சொன்னது

அரசாளும் நாயகியார் அல்லியரும் தான் கேட்டு 
சீரி பொறி பறந்து செவ்வாள் கருக விட்டு 
எதித்து எதிர்த்துப் பேசுவதும் என்னுடன் சொல்லுவதும்
மறுத்துத் தடுக்கின்றாய்  மன்னா கர்வம் என்ன
 
இந்தக் கருவத்தை இப்போது அடக்குவேன் பார் 

கட்டழகி தாதியரே கருமானை அழையும் என்றாள் 
விஜயனார் தன் மகனை விலங்கிலே போடும் என்றாள்

கால் விலங்கு கை விவங்கு கழட்டவொண்ணாப் பெருவிலங்கு
மார் விலங்கு தோள் விலங்கு மன்னனுக்குப் போடும் என்றாள் 

புலந்திரன் சொல்வது

போரஞ்சா மன்னவன் புலந்திரனும் கூறலுற்றான் 

என்னை விலங்கு போட என் செய்தேன் என் தாயே

போகாத அரண்மனைக்குப் பொற்றொடியே போனேனா
மங்கையர் கோவிலுக்கு வலுவிலும் போனேனா
குடிமகள் வாசலிலே கூசாமல் போனேனா
உப்பரிகை ஏறி தான் உயரக் குதித்தேனா
கப்பல்கள் சோங்குகள் களவுகள் செய்தேனா

என்ன கொடுமை செய்தேன் என்னை விலங்கில் இட 

அல்லி விளக்கம்

அரசாளும் நாயகியார் அல்லியரும் கூறுகிறாள் 

ஆரடா தம்பியரே அல்ல என்றால் போதாது 
அத்தனையும் அல்லாமல் அரசே நீர் கேட்டருள்வீர் 

மச்சினியாள் மீறி வளர்ந்திருக்க 
மாது சிறை இருக்க மன்னவனே ஆகாது 
குடியாள் சிறை இருக்க கொற்றவனே ஆகாது 

நாடும் வராது மன்னா நகருகளும் சேராது 
ஊரும் வராது கண்டீர் உத்தமனே உந்தனுக்கு

மச்சினியாள் கோயிலுக்கு மகனே நீ செல்லும் என்றாள்

புலந்திரன் வினா

போரஞ்சா மன்னன் புலந்திரனும் கூறலுற்றான் 
உன்
ஆக்கினைக்குத் தான் பயந்து ஆய்ச்சியரே போனாலும் 
அவன் 
கற்கோட்டை முத்திரையும் கர்னனுட காவல்களும் 
சுத்தி மதில் எழுப்பிச் சூரியனைக் காணாமல் 
பக்கத்திலே எழுப்பிப் பகவானைக் காணாமல் 
வாசலுக்கு ஆயிரம்பேர் வாள் வீரர் காவலுக்குள் 

உருவின ஆயுதங்கள் உறையிலே போடாமல்
விழித்த கண் சிமிட்டாமல் மெல்லியலிடம் இருப்பார் 

காசிவள நாடாளும் கர்னன் அதிகாரம் 
தாமக் குழலாளின் தலைவாசல் காப்பானாம் 

அத்தனையும் நான் கடந்து ஆய்ச்சியரே போனாலும் 
ஆயிரம் தாதி அவளுடனே இருப்பாராம் 

அம்மா நீராடி ஆடும் கடலாடி 
விளையாடி வீற்றிருப்பார் மெல்லியலார் ஆயிரம் பேர் 

பொற்றொடியாள் அரண்மனைக்கு போகும் வகை செய்யும் என்றான்

மேகப் புரவி

அரசாளும் நாயகியாள் அல்லியரும் ஏது சொல்வாள் 
ஆரும் அறியாதே அம்மானைக் காணாதே 

அருகிருக்கும் தொழியர்கள் யாவரும் அறியாமல்
மாதினிட வாசலிலே மன்னவரே நீர் போவீர்  
      
மேகப் புரவியது வேந்தனே நான் தருவேன் 

என் ஆணை மன்னா நீ இனி ஒன்றும் சொல்லலாதே 

மன்னா நீ பேசாதே மன்னர் பெருமானே

தருமர் திரு ஆணை தம்பியர் தன் ஆணை விட்டேன்

மாதருடன் கூடி மருவி வருமளவும்
என் ஆணை மட்டும் இருக்கட்டும் இந்திரனே 
புலந்திரன் = இந்திரன்

என்றும் அவள் உரைக்க இன்பமுடன் கேட்டு 

மாதாவின் பாதம் மலர் தூவித் தெண்டனிட்டு
கொம்பனைக்குத் தெண்டனிட்டு கூறுவான் இந்திரனும்

உம் ஆணை கொண்டு நான் ஊர் வழிப் போவேனோ 
தாய் ஆணை கொண்டு நான் தனி வழியே பொவேனோ

போனால் பலிக்குமோ பெற்றொடியே என்றனுக்கு 
ஆணை விடுமின் என்று அடி வணங்கித் தெண்டனிட்டான்

அரசாளும் நாயகியாள் அல்லியரும் தான் கேட்டு 
விட்டானே ஆணையெல்லாம் வேந்தர் பெருமானே 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் 
இயற்றிய நூல் புலந்திரன் களவு மாலை

மேகப் புரவி


No comments:

Post a Comment