Pages

Monday, 26 December 2016

நற்றிணை 314 Natrinai 314

மூத்தோர் 
தன் இளமை மீண்டும் வேண்டும் என்று விரும்பினாலும் 
இளமையைத் திரும்பப் பெறமுடியாது. 

வாழ்நாளை வகைப்படுத்தி 
அளந்து வைத்திருக்கும் அறிவுடையவர் 
உலகில் யாரும் இல்லை. 

ஆதலால், 
மாரிக்காலத்தில் பூக்கும் 
ஈரத்தன்மை கொண்ட பித்திகைப் பூ மாலை, 
அரைத்த சந்தனம் 
ஆகியவற்றைக் கொண்ட மார்பில் 
உள்ள முலைக்கண் அமுங்கும்படி 
தழுவிக்கொண்டே 
இரவு நேரமெல்லாம் கழியட்டும் 

என்று 
தன் மொழித்திறத்தால் பேசியவர் 
அதனைப் பொய்யாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.

நீர்க் குமிழி போல் 
பூத்திருக்கும் கள்ளியில் அமர்ந்துகொண்டு 
ஆண்புறா 
தான் விரும்பும் பெண்புறாவை 
அழைக்கும் காட்டில் 
கோடைக்காலத்தில் சென்றுவிட்டார்.

தோழியிடம் 
இவ்வாறு சொல்லிக்கொண்டு 
தலைவி கலங்குகிறாள்.
 

அலங்கல் = மாலை
அழிந்தும் = மனம் நொந்துகொண்டாலும்
ஆரம் = சந்தனம்
என்றூழ் = என்று என்னும் கதிரவன் தன் ஊழாகிய வெயிலை உதிர்க்கும் கோடை
கொம்மை அம் புகர்ப்பின் கருங்கண் வெம்முலை = குவிந்திருக்கும் பாங்கில் அழகிய புள்ளிகளுடன் கருநிறக் கண் கொண்ட விருப்பம் தரும் முலை
ஞெமுங்க = அமுங்க
நறுங்காழ் ஆரம் = மணக்கும் வயிரம் பாய்ந்த சந்தனக் குழம்பு
நொடி = நீர்குமிழி
பித்திகம் = சிறுசண்பகம்
புலம்பு = தனிமை

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

''முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்     5
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல்'' என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள்  10
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.
முப்பேர் நாகனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

சண்பகம்
(ஒப்புநோக்குவதற்காக)


பித்திகம் \ சிறுசண்பகம்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லி

No comments:

Post a Comment