Pages

Friday, 23 December 2016

நற்றிணை 310 Natrinai 310

அவன் ஊரன். 
அவன் ஊரில் 
சுடர் விட்டு எரியும் விளக்கைப் போல் 
தாமரை பூக்கும். 

யானைக் காது போல் 
அதன் இலை இருக்கும். 

நீர் உண்ணும் அந்தக் குளத்துறையில் 
மகளிர் பயந்து ஓடும்படி 
வாளைமீன் பிறழும். 

இப்படிப்பட்ட ஊர்த்துறை கொண்ட ஊரின் தலைவன் அவன்.

அவனுக்கு நாள்தோறும் 
புதுப்புது பெண்மகளைக் கூட்டித் தரும் 
பெண் நீ (விறலி)

நீ நன்மை பேசும் நாக்கைத் தொலைத்துவிட்டுப் பேசுபவள். 
உன் சிறு சிறு சொற்களுக்கு உடன்பட்டு, 
ஆராய்ந்து பார்க்காமல் 
ஏற்றுக்கொள்ளும் தாய்மார்களிடம் 
மறைத்து ஏதும் சொல்லமாட்டாய் என்று 
எப்படி நம்புவது? 

பாணன் கையில் ஊதுகொம்பும், 
தண்ணுமையும் இருக்கும். 
அவற்றின் உள்ளே எதுவும் இருக்காது. 
அதன் வழியேதான் இசை வெளிவரும். 

அதுபோல உள்ளீட்டு உண்மை இல்லாத 
வெற்றுப் போர்வைதான் உன் வாயிலிருந்து வரும் 
அழகிய ஏமாற்றுச் சொற்கள்.  

இது எனக்குத் தெரியும்.
இவ்வாறு விறலியிடம் தலைவி சொல்வதாகவோ, 
பரத்தை சொல்வதாகோ கொள்ளலாம்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை மருதம்

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே!             5
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல,             10
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே?

வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது;
விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.
பரணர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


எரியும் சுடர் போல் தாமரை மொட்டு 

No comments:

Post a Comment