Pages

Wednesday, 21 December 2016

நற்றிணை 298 Natrinai 298

புதிய வழிப்போக்கர் வருவதைப் பார்த்து, 
கொலைக்குற்ற நோக்கம் கொண்ட ஆடவர், 
குறி தவறாமல் பாயும் அம்பினைத் (செங்கணை) தொடுத்துத் 
தம் சுற்றம் அறியும்வண்ணம் 
தண்ணுமைப் பறையை முழக்குவர். 

அந்த ஓசை கேட்ட கழுகுகள் 
மரக்கிளைக்கு வந்து காத்திருக்கும். 

இப்படி அச்சம் தரும் பாலைநிலப் பாதையில், 
என் நெஞ்சமே, 
நீ செல்ல நினைக்கிறாய். 

ஆனால், 
நீ கரும்பு எழுதிய இவளது தோளை ஆசையோடு பார்க்கிறாய். 
செல்லவும் நினைகிறாய், 
இவளுடன் இருக்கவும் நினைக்கிறாய். 
ஒரு வழியை உன்னால் பின்பற்ற முடியவில்லை.

நல்ல தார்மாலை அணிந்து 
அழகிய தேரில் வரும் 
செழியன் ஆளுகைக்கு உட்பட்ட கூடல் நகரில் 
சிறப்புப் பெற்ற (ஒருமை செப்பிய) 

அரிய முல்லைப் பூ கமழும் கூந்தலை உடைய 
இவளது முலைமலையைத் தழுவுதலும், 
பொருள் ஈட்டும் நோக்கமும் 
ஒன்றாக அமையுமா? 
எண்ணிப்பார், 

என்று தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப்    5
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய் வாழி, எம் நெஞ்சே! நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
ஒருமை செப்பிய அருமை, வான் முகை   10
இரும் போது கமழும் கூந்தல்,
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோ மற்றே?

தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங்கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

கூந்தலில் மலர்

No comments:

Post a Comment