Pages

Sunday, 18 December 2016

நற்றிணை Natrinai 288

அவன் குன்ற நாடன். 

அருவி கொட்டும் மலை முகட்டில் 
இளவெயிலைத் துய்க்கும் மயில், 
தோகையை விரித்துக்கொண்டு 
தன் பெண்மயிலோடு சேர்ந்து ஆடும் 
குன்ற நாடன் அவன். 

அவன் பிரிந்திருக்கிறான் 
என்று எண்ணிக்கொண்டு 
என் நெற்றி பசலை பாய்ந்துள்ளது. 

அதனைக் கண்டு என் தாய் 
நெல் முளைத்திருக்கும் முளைப்பாலி 
ஏந்திய வயது முதிர்ந்த பெண்களுடன் சென்று 
விரிச்சி கேட்கிறாள்.

மலையில், பால் பிடிக்கும் தினைக்கதிரிலிருந்து 
கிளி ஓட்டிக்கொண்டிருந்தபோது 
முருகனைப் போன்றவன் வந்து 
என்னை வருத்தியதை 
அந்த விரிச்சி 
என் தாய்க்குச் சொல்லுமா?

தலைவி தோழியைக் கேட்கிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை  5
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும் ஆயின், வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும், ''இந்
நெடு வேள் அணங்கிற்று'' என்னும்கொல் அதுவே?              10

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.
குளம்பனார்

இது கி.மு. காலத்துப் பாடல்.


முளைப்பாலி
ஒன்பான் கூல முளைப்பாலி
நவதானிய முளைப்பாலி

No comments:

Post a Comment