Pages

Friday, 16 December 2016

நற்றிணை Natrinai 280

கொக்கு உட்காரப் பனம்பழம் வீழும். 

கொக்கு கூம்பி உட்காந்து இருப்பது போல 
ஆம்பல் 
மொட்டு விட்டிருக்கும் நீர்நிலையில் 
‘துடும்’ என்னும் ஒலியிடன் 
பனம்பழம் வீழும். 

இப்படி விழும் துறையை உடையவன் 
உன் கணவன் ஊரன். 

தோழி! 

அவன் பரத்தையிடம் சென்றுவந்தான் என்பதற்காக 
ஊடல் கொள்ளாதே என்கிறாய். 

அவன் என் வீட்டில் இல்லாமையால் 
எப்போதும் விருந்து வரும் என் இல்லத்துக்கு 
யாரும் விருந்தினர் வரவில்லை. 

அதனால் நான் வருந்துகிறேன். 
அதற்காகத்தான் நான் அவன்மேல் ஊடல் கொள்கிறேன். 

இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

நன்மனை – 
தொன்றுதொட்டு முதிர்ந்த குடிமக்களான வேளிர் 
வாழும் ஊர் குன்றூர். 

அவ்வூர்க் கழனியைக் காவல் காப்போர் 
அங்கு மேயும் ஆமை முதுகில் 
நந்து என்னும் சங்குப் பூச்சியின் ஓட்டை உடைத்து 
உணவுக்காக எடுத்துக்கொள்வர். 

அந்தக் குன்றூர் போன்றது தலைவி வாழும் நல்ல வீடு.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை மருதம்

''கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்'' என்றி தோழி! புலவேன்                       5
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே.   10

வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது;
தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
பரணர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:

Post a Comment