Pages

Sunday, 11 December 2016

நற்றிணை Natrinai 277

தும்பியே, 
நீ கொடுமை செய்கிறாய். 
என்னைப் போலவே காம-நோயில் துன்புறுவாயாக! 
நான் உன்னை இப்படித்தான் திட்டுவேன். 
உன் உடம்புதான் கறுப்பாக இருக்கிறது என்று எண்ணினேன். 
அறிவும் முழுதும் கருமையாகி இருண்டு கிடக்கிறதே! 
அறநெறி உன்னிடம் இல்லை. 

என் வீட்டைக் காக்கும் முள் வேலியில் 
மகரந்தத் தாது மண்டிக் கிடக்கும் பீர்க்கம் பூவை ஊதி 
அதில் உள்ள தேனை உண்ணுகிறாய். 

பூ மணம் இல்லாத பசலையை ஊத மறுக்கிறாய். 
முன்பு உன்னைப் பிடிக்க ஓடினேன். 
அதன் பயன் போலும்; 

இப்போது 
என் காதலர் அன்பு இல்லாதவராக 
என்னை விட்டுவிட்டு 
மலைக்காட்டு வழியில் சென்றுவிட்டார். 

நான் அவரை நினைத்து வருந்துகிறேன் என்று 
அவரிடம் சென்று 
நீ சொல்வாயாக.

இப்படித் தலைவி தும்பியிடம் பேசுகிறாள்.
இது “காமம் மிக்க கழிபடர் கிளவி”
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

கொடியை; வாழி தும்பி!  இந் நோய்
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ அறனிலோய்! நினக்கே?
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை    5
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர்,      10
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.

பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.
தும்பி சேர் கீரனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


தும்பி 

No comments:

Post a Comment