Pages

Sunday, 11 December 2016

நற்றிணை Natrinai 276

இக்காலச் சிறுமியர்
ஆடிக் காட்டும் குரவை நடனம்

சொடுக்கித் திறந்து
நடனம் காணுங்கள்

கொம்பு ஊதிக்கொண்டு, 
வேட்டையைக் கவ்விப் பிடிக்கும் நாயுடன் 
காட்டில் அலைந்து உணவு தேடி உண்டு வாழும் 
வேட்டுவ வயவர் மகளிர் 
என்று எங்களை அழைப்பீராயின் 
அது சரிதான். 
நாங்கள் குன்றில் வாழும் மகளிர்; 
கொடிச்சியர்; 

விளைச்சலைக் காவல் காக்கும் சேணோன் 
கால் நிறுத்திப் போட்ட பந்தலில் 
காட்டு மயில் கூடுகட்டும் 
மலைப்பகுதியில்தான் எங்கள் ஊர் உள்ளது. 

நீர் உம் ஊருக்குச் செல்லாமல், 
எம் ஊரில் தங்கிச் செல்வாயாக. 

நாங்கள் மூங்கில் குழாயில் அடைத்து வைத்திருக்கும் 
பெருமலைத் தேனை உண்ணலாம். 
நாங்கள் ஆடும் குரவை ஆட்டத்தைக் கண்டு மகிழலாம்.

தோழி தலைவியின் உள்ளக் கிடக்கையை இவ்வாறு தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.

 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

''கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்'' என்றி ஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் 5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.       10

பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.
தொல் கபிலர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


கை கோத்தாடும் குரவை 

7 comments:

  1. //நாங்கள் குன்றில் வாழும் மகளிர்//.... குறவர் மகளிர் என்ற உண்மையை எழுதினால் யாருக்காவது இழுக்கா என்ன ?

    ReplyDelete
  2. குறவர் மகளிரேம்
    குன்ற கெழு கொடிச்சியேம்

    அர்த்தம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. குறவர் மகளிர், குன்று கெழு கொடிச்சியர் ஆகிய இரு தொடர்களும் மலையில் வாழும் மகளிரைக் குறிக்கின்றன.

      Delete
    2. கொடிச்சியர் பொருள் குறவர்குல பெண்களே...

      குறமகள் வள்ளியை கொடிச்சி என்றே இலக்கியம் கூறுகின்றன...

      Delete
    3. கொடிச்சி என்றால்
      கொடி போன்றவள் என்றும்,
      கொடியவள் என்றும்
      பொருள்.
      "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்"
      ஆகையால்,
      கொடி போன்றவள் கொடியவள் கொடியவள் (கொற்றவை) ஆகிறாள்.
      மலையிலும் காட்டிலும் வேட்டையாடும்போது
      வெற்றி தரும் தெய்வம் கொற்றவை.
      கொற்றவை என்னும் சொல்லின் பொருளை இவ்வாறு உணர்ந்துகொள்ள வேண்டும்.

      Delete
  3. நாயோடு வேட்டைக்குச்செல்லுதல் குறிஞ்சித்திணையில் வேட்டைத்தொழில் நடைப்பெற்றிருப்பதைக் கூறவா ஐயா

    ReplyDelete