Pages

Friday, 9 December 2016

நற்றிணை Natrinai 271

தன் மகள் 
காதலனுடன் சென்றதை எண்ணிச் 
செவிலி கதறுகிறாள்.


நான் இங்கே இருக்கிறேன். 

புதிதாகக் கன்று போட்டிருக்கும் எருமை 
அது போட்ட சாணத்திலேயே 
இங்கு உறங்கிக்கொண்டிருக்கிறது. 

இப்படிப்பட்ட வளமான அவள் வீட்டில் 
என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாள். 

அங்கே அவள். 
அவள் காதலன் ஒரு பெரிய வீரக் காளை. 
அவன் கூறிய பொய்யான பேச்சை நம்பிப் போய்விட்டாள். 

அங்கே, 
அவள் சென்ற தொலைதூர நாட்டில் 
சுவையுள்ள நெல்லிக்காய் 
கடை திரண்டு வழியெங்கும் கிடக்கும். 

அவற்றை அவள் அவனுடன் சேர்ந்து உண்பாள். 
பின்னர் பூக்கள் கொட்டிக் கிடக்கும் சுனையில் 
அவனுடன் நேர்ந்து நீர் உண்பாள். 
அவள் என் மகள். 
குவளை மலர் போன்ற கண்களை உடையவள். 

வயலில் களை வெட்டி வேலை செய்வது போல் 
நடித்துக்கொண்டு 
பொய்தல் விளையாடும் விளையாட்டுத் தோழிமார் 

மாலையில் விளையாடும்போது 
நிலா மறைவதைக் காண்பது போல நான் வருந்ததுகிறேன். 

கூற்றுவன் என் உயிரைக் கொண்டுபோகவில்லையே. 
பெரிய தாழியிலிட்டுக் கவிழ்த்து என்னை மூடிவிடுங்கள்.
 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்   5
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்,
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு,      10
மா இருந் தாழி கவிப்ப,
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.

மனை மருண்டு சொல்லியது.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இது கி.மு. காலத்துப் பாடல்.


No comments:

Post a Comment