Pages

Tuesday 6 December 2016

நற்றிணை Natrinai 264

தலைவன் தன் ஊரை “எம் ஊர்”
என்று பெருமிதம் தோன்றக்
கூறுவதும்

தோழி
தலைவியின் காதலனை
“நம் காதலர்” என்று
தலைவிக்கும் தோழிக்கும்
இடையேயுள்ள  நட்புரிமை
தோன்றக் கூறுவதும்

பண்டைய மரபு.

மடந்தைப் பெண்ணே! 
பொழுது இருட்டுவதைப் பார். 
பாம்பு வளைக்குள் நுழையும்படி 
வானம் மழை பொழியும் காலம் தோன்றும்போது, 

மணிநிறப் பிடரியைக் கொண்ட ஆண்மயில் 
தன் அழகு ஒளிறும் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல, 

பூச் சூடிய உன் மென்மையான கூந்தல் 
காற்றில் அசைந்தாடச் செல்வாயாக. 

மூங்கில் காட்டில் மேய்ந்த பசுக்களைக் 
கோவலர் ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் மணியொலி 
இங்குக் கேட்கிறதே 
அதுதான் என்னுடைய நல்ல சிற்றூர்.

காதலியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் காதலன் காதலிக்கு அவர்கள் ஊருக்கு அருகில் வந்துவிட்டதைத் தெரிவித்துத் தெம்பூட்டுகிறான்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர      5
ஏகுதி மடந்தை! எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே

உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது;
உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.
ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

ஆ பூண் தெண் மணி
மணி ஓசை

No comments:

Post a Comment