Pages

Wednesday, 16 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 1-1

1 மங்கல வாழ்த்துப் பாடல் \ திருமணத்தை வாழ்த்தும் பாடல் \ உதவும் பேறுகளைப் போற்றும் பாடல்கள்.

அரசன் சென்னியின் (சோழன்) வெண்கொற்றக் குடை போல் உலகுக்குத் தண்ணொளி தருவதால் திங்களைப் போற்றுவோம்.
காவிரி நாடன் (சோழன்) ஆணைச்சக்கரம் போல பொன்நிற மேருமலையை வலம் வருவதால் ஞாயிற்றைப் போற்றுவோம்.
சோழன் உலகுக்கு அருள் சுரப்பது போல நீர் சுரப்பதால் மாமை நிற மழையைப் போற்றுவோம்.
சோழன் குலத்தோடு ஓங்கிப் புகழ் பெற்றுத் திகழ்வதால் அவன் தலைநகர் புகார் நகரைப் போற்றுவோம்.  

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

பாடல் \ சிந்தியல் வெண்பா

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடைபோன்று இவ்
அங்கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்த லான்.

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்''
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு''
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.
இவை நான்கும் தாழிசை



கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

1 comment: