Pages

Tuesday, 29 November 2016

நற்றிணை Natrinai 247

பொருள் தேடச் செல்லவிருக்கும் தலைவனிடம் தோழி கூறுகிறாள்.

நீ மலைநாடன். 
யானை தன் பழமையான வலிமையுடன் சினம் கொண்டு தன்னை எதிர்த்த புலியைக் கொன்று குருதி படிந்த கொம்புடன் நிற்கும். 

பெருமழை பொழியும்போது அந்தக் கறையைக் கழுவிக்கொள்ளும். 

அப்படி மழை பொழிந்த மேகம் 
இரும்பு மணையால் தூய்மை செய்த பஞ்சு போல் 
விடியற்காலப் பொழுதில் மஞ்சுமேகத்துடன் தோன்றும். 

இப்படித் தோன்றும் மலைநாடன் நீ. 

நீ இவளுக்கு அளி (உறவுக்கொடை) செய்யவில்லை என்றாலும், 
இவளுக்கு நன்மை இல்லாதன செய்வாய் ஆயினும், 

உன்னைத் தொழுதுகொண்டிருக்கும் 
என் தோழியின் நெற்றியில் 
புதிதாக இருப்புக் கொண்டிருக்கும் பசலை நோய்க்கு 
உன் உறவுகொடையைத் தவிர 
வேறு மருந்து இல்லை 
என்பதைத் தெரிந்துகொண்டு செல்வாயாக.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ     5
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!

''நீட்டியாமை வரை'' எனத் தோழி சொல்லியது.
பரணர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


"எஃகு உறு பஞ்சு"
இரும்புக்கு இடையில் விட்டுத் தூய்மை செய்யப்பட்ட பஞ்சு
பருத்தி மணை

No comments:

Post a Comment