Pages

Saturday, 26 November 2016

நற்றிணை Natrinai 238

வறட்சி போகும்படி மழை பொழிந்திருக்கும் கானத்தில், 
தலையில் கோதைமலர் சூடிய மகளிர் கூட்டம் 
பேசிக்கொண்டிருப்பது போல 
வண்டுகள் ஒலித்துக்கொண்டே வாயைத் திறக்கப், 
பிடவம் பூ மலரும் மாலைக்கால அந்தி நேரத்தில், 
பருவம் காட்டும் பெருமழை மேகக் கூட்டம் 
இருண்ட வானப் பாதையில் சென்று இடி முழங்குகிறது. 

இங்கு அவர் என்னோடு இல்லை 
என்னும் நிலை அதற்குத் தெரியுமோ? 

சான்றோரைப் போன்று அந்த மேகம் நடந்துகொள்ளவில்லை. 
இருண்டு இடியாக முழங்குகிறது. 

அந்த இடி பாம்புப் பையை மழுங்கச் செய்து, 
மாட்சிமை பொருந்திக் 
கனியாமல் இருக்கும் அந்த இடியின் நெஞ்சம் 
இனிமை இல்லாமல் இருக்கிறது.

இடியின் நெஞ்சத்தில் இனிமை இல்லை.

மழைக்காலம் வரும்போது வந்துவிடுவேன் 
என்றவர் வராதபோது வானம் இடிக்கிறதே. 

அந்த இடி முழக்கங்கள் 
எனக்கு இனியவை அல்ல.

இவ்வாறு தலைவி சொல்லிக்கொண்டு கலங்குகிறாள்.
  • மால் = இருட்டு, மான்று = இருண்டு
  • உரும் = இடி, உர = இடித்துக்கொள்வதால், உரறும் = இடிக்கும்
  • மழுங்கல் = கூர்மை மழுங்குவது போலப் படமெடுக்கும் பாம்பின் நச்சுப்பை மழுங்கிப்போதல்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை!             5
''அவர் நிலை அறியுமோ, ஈங்கு'' என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
கனியா நெஞ்சத்தானும், 10
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.

தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.
கந்தரத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

இயல்பு

No comments:

Post a Comment