Pages

Saturday, 19 November 2016

நற்றிணை Natrinai 214

“மழைகாலம் வரும்போது திரும்பிவிடுவேன் என்று சொன்னவருக்கு மழை பொழியும் குரல் கேட்கவில்லையா” என்று தோழியிடம் சொல்லித் தலைவி வருந்துகிறாள்.


உடம்பை அசைத்துக்கொண்டு சும்மா இருப்பவர்களிடம், புகழ், இன்பம், ஈகை ஆகிய மூன்றும் சேரா, என்று பொருளீட்ட, என்னை விட்டுவிட்டுச் சென்றார். 

“மழைக்காலம் வந்ததும் அரும்பு அவிழ்ந்து தேன் உண்ணும் பூம் போதுகளை உன் தலையில் சூட்ட வந்துவிடுவேன்” என்று என் நெஞ்சம் கொள்ளுமாறு சூளுரைத்தார். 

மழைமேகம் தவழும் மலைகள் பலவற்றைக் கடந்து பொருள் செய்துவர என் குற்றமற்ற காதலர் சென்றார்.

தோழி!

இப்போது என் தோளிலுள்ள வளையல்கள் கழலுவதைப் பார்த்து ஏளனம் செய்து சிரிப்பது போல வானம் மின்னுகிறது. இடித்து ஆரவாரம் செய்கிறது. இந்தக் குரல் அவருக்குக் கேட்கவில்லையா?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

''இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்'' என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
''அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு'' என,        5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார் கொல்லோ தோழி! தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி  10
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?

உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது.
கருவூர்க் கோசனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:

Post a Comment