Pages

Saturday, 19 November 2016

நற்றிணை Natrinai 212

பார்வை வேட்டுவன் தான் பழக்கி வைத்திருக்கும் பெண் பறவையை வைத்து மயக்கி ஆண் பறவைகளைத் தன் வலைக்குள் விழச்செய்து பிடித்துக்கொள்வான். இப்படிப்பட்ட வலையில் கணத்துள் என்னும் பறவை விழுந்து புலம்பி ஒலி எழுப்பிற்று. காட்டு வழியில் செல்லும் கோடியர் யாழ் நரம்பில் இசை எழுப்புவர். இந்த இசை போலக் கணத்துள்-பறவை ஒலி கேட்டது. அந்தப் பெருமலை வழியில் கடுமையான ஓசை எழுப்பும் பம்பை, வேட்டைநாய் ஆகியவற்றுடன் வடுகர் வேட்டைக்குச் செல்வர். இப்படிப்பட்ட வழியில் பொருள் ஈட்டச் சென்ற என் கணவர் வந்துவிட்டார்.  
தோழி! கேள்.
கையில் பொன்னால் செய்த கழல்தொடி அணிந்திருக்கும் என் மகன் என்னை அணைத்துக்கொண்டு இனிமையாகப் பேசும்போதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டிருந்த நான் நேரில் கண்டு மகிழும்படி அவர் வந்துவிட்டார்.
தலைவி மகிழ்ச்சியுடன் பலரும் அறியக் கூறும் சொற்கள் இவை.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்
5
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி தோழி! கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.
10

பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது. 
குடவாயிற் கீரத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


வலையில் விழுந்த பறவை

No comments:

Post a Comment