ஆளி நன்மான்
அருவி ஒலிக்கும் மலையடுக்கத்தில் ஆளி என்னும்
விலங்கு வேட்டைக்கு எழுந்து, பற்றும் நகங்களும், மேனியில் புள்ளிகளும் கொண்ட புலியைக்
கொல்லும். ஆளி தன் வரிமையான நகங்களால் பற்றி யானையை இழுக்கும்.
இப்படிப்பட்ட நெருங்கமுடியாத
காடாயிற்றே என்று, என் நெஞ்சே! நீ எண்ணிப்பார்க்கவில்லை.
குவளை மலர் போன்ற கண்ணை உடைய
உன் காதலியாகிய இவளை இங்கே இருக்கும்படி விட்டுவிட்டு பொருளீட்டச் செல்வாய் ஆயின்,
இன்றோடு இவளது மாமை நிற அழகு போய்விடும்.
வளைந்த முள்ளினை உடைய ஈங்கை, உயர்ந்த மா மரம்
ஆகியவற்றின் தளிர்கள் மழையில் நனைந்து காட்சி தருவது போல் விளங்கும் இவளது மாமைக் கவின்
போய்விடும்.
பின்னர் இவள் அழகைப் பெறுவது
எப்படி?
எனவே பிரிந்து செல்லாதே.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
அருவி ஆர்க்கும் பெரு
வரை அடுக்கத்து,
ஆளி நன் மான்,
வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை
தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு,
வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம்
என்னாய், நீயே 5
குவளை உண்கண் இவள்
ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறி ஆயின், இன்றொடு
போயின்று கொல்லோ தானே படப்பைக்
கொடு முள் ஈங்கை
நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ்
பெயல் தலைஇய 10
ஆய் நிறம் புரையும்
இவள் மாமைக் கவினே!
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது.
தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.
இளநாகனார் பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.
No comments:
Post a Comment