Pages

Friday, 28 October 2016

அகநானூறு Agananuru 367

மாலைக்காலம் இனிக்கும், யாருக்கு? 
காதலனோடு சேர்ந்திக்கும் காதலிக்கு. 

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

விளங்கும் ஒளி கொண்ட மண்டிலமாகிய சூரியன் தான் வாழும் பகல் காலத்தை மாற்றிக்கொண்டு ஒளி மங்கி மலையில் மறையும் மாலைக்காலத்தில், விரிந்த கொம்புகளைக் கொண்ட முதுமையான ஆண்மான் குரல் கொடுத்ததும், பெண்மான்கள் வந்து வீட்டு மனையோரத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் நொச்சிச் செடிக்கு அடியில் தங்கும். 

அது போர் முனைக்குப் பக்கத்தில் இருக்கும் சிற்றூர். 
அங்கே வேங்கை மரம். 
அதன் அருகில் வரகைச் சேமித்து வைத்திருக்கும் கூடு. 

அங்கே தளிர் போன்ற தாவாயும், செறிந்த கழுத்து மயிரும், முருக்கம்பூ போன்று சிவந்த கொண்டைத் தலையும் கொண்ட கோழிச்சேவல் பதுங்கி இருக்கும். 

கறி தின்னும் ஆசையோடு இருக்கும் தன் பெண்பூனையின் பசியைப் போக்குவதற்காக ஆண்-காட்டுப்பூனை அந்தச் சேவல் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும். 

இப்படிப்பட்ட மாலைக் காலமும் இனியதுதான். 
யாருக்கு? 
நல்ல முலையின் அகப்பகுதி பொருந்தும்படி இறுகத் தழுவி உயிரைக் குழையச் செய்யும் துணை இருப்பவர்களுக்கு.

இப்படிப்பட்ட துணையைப் பிரிந்திருக்கும் தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள். (அல்லது)

காதலியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லும் காதலன், வழியில் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,             5
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின்,         10
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல், 15
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment