Pages

Wednesday, 26 October 2016

அகநானூறு Agananuru 363

உன் உடம்பு மெத்தை ஆகட்டும். 
உன் காதலர் வருகிறார். 
தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

1
உன் காதலர் தேரில் வருகிறார். நிரந்து வரிசையாகப் பூட்டப்பட குதிரைகளை ஓட்டிக்கொண்டு தேரில் வருகிறார். சூரியன் பகலெல்லாம் உருண்டு மலையில் மறையும் வேளையில் வருகிறார். நீ உன் அணிகலன்களைப் பூண்டவளாக, பொழுது மறையும் வேளையில் கழியில் மலரும் மலர் போல இரு. நீ அவருக்கு மெல்லிய மெத்தை ஆகவேண்டுமல்லவா?
2
கற்கள் நிறைந்த வழியில் அவர் சென்றார். பெருங்காற்றில் நெல்லியின் பசுமையான காய்கள் வழியில் உதிர்ந்து கிடந்தன. பொன்னால் செய்த காசுகள் போல் உதிர்ந்து கிடந்தன. 

கொலை செய்து கொள்ளையடிக்கும் மறவர்கள் வழியில் காத்துக்கொண்டிருந்தனர். வழியில் சென்ற ஒருவரின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சிக் கொன்றனர். அவரின் புண்ணைத் தின்ன ஆண்பருந்து தன் பெண்பருந்தை அழைக்கும் குரலால் கூவிற்று. அங்கு முடைநாற்றம் வீசியது. இப்படிப்பட்ட கொடிய வழியில் அவர் சென்றார்.
3
பொருள் செய்யும் தொழிலில் வெற்றிகண்டவராக இப்போது உன்னை விரும்பி வருகிறார். தோழி, உன் கண் கவின் கொள்ள வருகிறார்.

கண் கவின் – மையுண்ட கண். துணையாக அழகுடன் எதிர்கொள்ளும் கண்கள். பெண்மானைப் போல் மருண்டு நோக்கும் கண்கள். இந்தக் கண்கள் அழகு பூக்கும்படி வருகிறார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று,
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய்,
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப்         5
2
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர்         10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய  15
3
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து,
எய்த வந்தனரே தோழி! மை எழில்
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment