Pages

Wednesday, 26 October 2016

அகநானூறு Agananuru 361

தாமரை போன்ற திருமுகத்தில் குவளை இதழ் போன்ற மதமதக்கும் கண்கள். 
வளையல் அணிந்த அழகிய கை. 
இவற்றைக் கொண்டவள் என் மடந்தை. (கொளுத்தக் கொண்டு கொண்டது விடா மடமைக் குணம் கொண்டவள்)

ஆராய்ந்து தேடி எடுத்த பூவிதழ் போன்று மென்மையானவள். 
வார்த் துணியால் வரிந்து கட்டிய அவள் முலை முற்றத்தைத் தழுவும்போது (கவவு) நூல் அளவு இடைவெளி தோன்றினாலும் ஊடல் கொள்ளும் பண்பினள். 

மிகப் பெரிய காம உணர்வோடு அவளை நுகர்வதைக் காட்டிலும், சிறந்தது ஒன்றுமில்லை என்று, என் நெஞ்சே! உனக்கு அன்போடு எடுத்துரைத்தேன். 

அதனை நீ ஏற்றுக்கொள்ளவில்லை. 
பொருளுக்காகப் பிரிந்து மயக்கத்தோடு (மருளி) வந்துள்ளாய். 

தேவர் உணவுக்காக வேள்வித் தீயில் போட்ட ஆமை தான் இருந்த குளத்துக்குச் செல்ல விரும்பியது போல, அவளை இங்கிருந்து நினைப்பதை விட்டுவிடு. 

அவளது அரிசிமுள் போன்ற பற்களையும், அவள் வாயிலிருந்து வரும் சிறுசிறு கொஞ்சு மொழிகளையும், அவளது தோளையும் இனி நீ மறந்துவிடு. 

பன்மலை அடுக்கத்தில் கொடிய பாறைகளுக்கு இடையே வருந்தத்துடன் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க.
  • கரியாப் பூவின் பெரியோர் – வாடாத பூ மாலையை உடைய தேவர்
  • அழல் எழு தித்தியம் – தீ வளர்க்கும் வேள்வி

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

''தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், 5
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்'' என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர, 10
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,  15
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment