Pages

Tuesday, 25 October 2016

அகநானூறு Agananuru 358

அன்னை வினவின்


நீல மலர் நிறம் கொண்ட கொண்டையையும், கண்டாரைக் கவரும் தோகையையும் கொண்ட ஆண்மயில் பெண்மயிலை அழைத்துக் குரல் எழுப்பிக்கொண்டு ஆடிக்காட்டும் மலையில் கண் போல் இதழ்களைக் கொண்ட குவளை மலரைக் கூந்தலில் சூடிக்கொண்டு வழக்கம் போல் நீ சுனையில் நீராடவில்லை. 

மனம் சோர்ந்து காணப்படுகிறாய். 
தனிமையை விரும்புகிறாய். 
இப்படி நீ இருந்தால், ஏன் என் மகள் இப்படி இருக்கிறாள் என்று அன்னை கேட்டால், என்ன என்று அவளுக்கு நான் சொல்லுவேன்?

அருவி விழும் மலையில் பட்டத்து யானை கொடியுடன் தோன்றுவது போல உயர்ந்த செம்மாப்புடன் தோன்றிபவன் அவன். அவனை எண்ணி உனக்கு உண்டான காமநோய் என்பது எனக்குத் தெரியும். தாய்க்கு என்ன சொல்வேன், என்கிறாள், தோழி.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்,
காமர் பீலி, ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி, மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி,
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக்     5
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய்,
உயங்கிய மனத்தை ஆகி, புலம்பு கொண்டு,
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி,
அன்னை வினவினள் ஆயின், அன்னோ!     10
என் என உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி,
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்ப, தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?            15

பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment