Pages

Monday, 24 October 2016

அகநானூறு Agananuru 356

நடுத் தெருவில் அவன் அவளது கையைப் பிடித்தான்.

1
தலைவி சொல்கிறாள்.

ஆமை கிணைப் பறை போல் பிறழும் துறையினை உடைய ஊரன் அவன்.

தண்ணீர் ஓடும் ஆற்றுத் துறையில் மேல்-துறையில் கழுவிவிட்ட பொருள்களைக் கீழ்த்துறையில் இருக்கும் ஆமை இயவன் அடிக்கும் தமுக்கு போல் பிறழ்ந்துகொண்டு தன் பெரிய வாயைப் பிளந்து உண்ணும். அதனைப் பார்த்துக் கம்புள் கோழி இயவன் அடிக்கும் தமுக்கு இசை போலக் கூவும்.

2
ஊரன் நீண்ட தெருவின் நடுவில் என்னைப் பார்த்தான். திடீரென என் கையைப் பிடித்தான். நான் “அன்னாய்” (அம்மா) என்று கத்தினேன். அவன் என் கையை விட்டுவிட்டான்.
3
அவன்மீது எனக்கு முன்பிருந்தே ஆசை. அதனால் நான் என் தாயிடம் எதுவும் சொல்லவில்லை.

நன்னன் ஆளும் பறம்பு நாட்டில் சிறுகாரோடன் மணிக்கல்லை அரக்கோடு சேர்த்துப் பிடிக்க வைத்துக்கொண்டு பட்டை தீட்டுவான். அந்தக் கல் போன்ற நாக்கு எனக்கு. அதனால்தான் கத்திவிட்டேன்.
4
தோழி சொல்கிறாள்.

சோழரின் மருமகன் நல்லடி. வல்லம் என்னும் ஊரின் அரசன். அவன் மதிக்காத அவனது பகைவர்கள் அவனது கோட்டைக் கதவை அவன் எண்ணிக்கூடப் பார்க்காத நேரத்தில் திறந்து உள்ளே நுழைந்தனர். அதுபோல அவன் என் வீட்டுக் கதவைத் திறக்கவும் கூடும்.

வல்லம் – நீண்ட கதிர்களை உடைய நெல்வளம் மிக்க ஊர். 
சோழர் - தேர்ப்படையும் யானைப்படையும் கொண்டவர்கள். 

5
அவன் உனக்கு அருள் புரியாமல் உன் உள்ளத்தைக் கொன்றாலும் அந்தக் கொலை தவறு (பழுது) ஆகாது. நீதானே கத்தினாய். நீ என்ன நினைக்கிறாய்? – இவ்வாறு தோழி தலைவியைக் கேட்கிறாள்.   
தோழி – தழைத்துப் பல்கிய கூந்தலை உடையவள்
தலைவி – பிரம்பு போன்று தழைத்த கூந்தலை உடையவள்
பிரம்பு – நன்னன் ஆஅய் (நன்னன் மகன் ஆய்) நாட்டு அருவியில் ஆம்பல் பூக்களோடு தழைத்திருக்கும் பிரம்பு
பாடம்
பறம்பு
பிரம்பு

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  மருதம்

1
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
2
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்  5
பொற் தொடி முன்கை பற்றினனாக,
''அன்னாய்!'' என்றனென்; அவன் கை விட்டனனே,
3
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கற் போல் நாவினேனாகி, மற்று அது 10
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
4
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று,      15
5
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே?                20

பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment