Pages

Monday, 24 October 2016

அகநானூறு Agananuru 355

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.


மாமரம் தளிர் விட்டிருக்கிறது.
அதன் கொம்புகளில் அமர்ந்துகொண்டு குயில் கூவுகிறது.
மரக்கிளைகளில் முதிர்ந்த இலைகள் உதிர்ந்துவிட்டன.

இசை வல்லோன் யாழ் நரம்பினைத் தடவிப் பாலை-இசை எழுப்புவது போல, மலர்களில் வண்டினங்கள் சங்கு போல் ஊதுகின்றன.

பூஞ்சோலையில் தாதுகள் உதிர்ந்து கிடக்கும் குளக்கரை மணல்மேட்டில் தங்கிக்கொண்டு அவர் நம் செழுமையான இல்லத்தை மறக்கும் வேனில் காலம் வந்துவிட்டது.

இனி வேறு வழி இல்லை. 

நாமே அவர் இருக்கும் இடத்துக்குச் செல்லவேண்டியதுதான். 

“வளையல் கழன்று துன்புறும்படி என்னைத் தனியே விட்டுவிட்டு அருளே இல்லாமல், பொன்னை விரும்பபிக்கொண்டு இப்படி இங்கே தங்கியிருத்தல் உனக்குத் தக்கது அன்று” என்று அவரைத் திட்டலாம். 

செல்லலாமா, தோழி என்று தலைவி கூறுகிறாள்.
  • துணிகயம் – தனிமைப்பட்டிருக்கும் குளம்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;           5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின், ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
''யாமே எமியம் ஆக, நீயே
பொன் நயந்து அருள் இலையாகி,
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்'' எனவே.

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
தங்கால் பொற்கொல்லனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment