Pages

Friday, 21 October 2016

அகநானூறு Agananuru 349

தோழி! 

திருமணம் செய்துகொண்ட அவர் என்னைத் தனியே விட்டுவிட்டு நன்னன் நாட்டுக் காட்டைத் தாண்டி ஏன் சென்றாரோ?

சங்கை அரத்தால் அறுத்துச் செய்த வளையலை அணிந்திருக்கும் என் கைகளைப் பற்றி அவர் என்னை மணந்துகொண்டார். அந்தக் கை தன் அழகை இழக்கும்படிச் செய்துவிட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார். 

தோழி! அது ஏன்?

அரசன் நன்னன் எமனைப் போல நடுவுநிலை பிறழாத செங்கோல் தாங்கி ஆட்சி புரிபவன். 
சொன்ன சொல் தவறாதவன். 
அஞ்சா நெஞ்சம் கொண்டு பல ஊர்களை வென்று தான் கொண்டுவந்து வைத்திருந்த அரிய செல்வத்தையெல்லாம், அவனைப் பாடிக்கொண்டு வருபவர்களுக்கு எதையும் எண்ணிப் பார்க்காமல் ஊற்றுநீர் சுரப்பது போல வழங்குபவன். 

அவன் நாட்டில் ‘ஏழில் குன்றம்’ என்னும் மலைப்பிரிவு உள்ளது. 

அங்குள்ள வேங்கை மர இலைகளை வளைத்துத் தின்ற யானை, வலிக்கும் தன் கையை, தன் மடிப்பு வரி கொண்ட நெற்றியில் வைத்துக்கொண்டு தேம்பும். (அழும்). 

அது கல்லில் பாம்பு இறங்குவது போலத் தோன்றும். இந்தக் காட்டின் வழியே சென்றுவிட்டாரே!

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர் கொல் தோழி! ஞெமன்ன்
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே,   5
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
ஏழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை 10
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?

தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கை பிடித்த கணவன் (இக்காலம்) 

No comments:

Post a Comment