Pages

Sunday, 9 October 2016

அகநானூறு Agananuru 327

அவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்.

1
இன்பம், துன்பம்; புணர்தல், பிரிதல் இவை பட்டப்பகலும், இரவும் போல மாறி மாறி எதிர்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள். இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.
2
இவற்றை உணர்ந்து எதிர்கொள்ளும் துணிவு இல்லாத என் நெஞ்சமே! உன் ஆசை முடுக்குகிறது என்று கொடுமையான காட்டு வழியில் உன்னால் செல்ல இயலுமா? நீ செல்ல நினைத்தால், என்னவளை நினைத்துக்கொண்டிருக்கும் என்னைப் பற்றி நினைப்பாயா?
3
களர் நிலத்தில் கால் பாய்ச்சி, வெயிலின் அழகிய ஆவியானது வரி வரியாய் நீர் போல, திசையெல்லாம் மரல் ஓடி, விலங்கினத்தைப் பெரிதும் துன்புறுத்தும் நிலப்பரப்பு அது. 

செங்குத்துப் பாறையில் அருவி கொட்டுவது போல பாறைமீது பாம்புத்தோல் தொங்கும் வழி அது. 

கறையான்-புற்று ஏறிக் காய்ந்து கிடக்கும் மரத்தில் வாழும் மணிக்கண் காக்கை இறந்து கிடப்போர் தசையைப் பிடுங்கித் தின்னும் வழி அது. 

வழியில் செல்வோரை, அவர்களின் பின்புறத்திலிருந்து இரக்கமின்றித் தாக்கிக் கொன்றவர்கள் தாம் கொல்லப் பயன்படுத்திய கோலை எறிந்துவிட்டு வருந்திக்கொண்டிருக்கும் வழி அது. 

அந்த வழியில் செல்லும்போது என்னவளை நினைத்துக்கொண்டிருக்கும் என்னைப் பற்றி நினைப்பாயோ?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
''இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
நன்பகல் அமையமும் இரவும் போல,
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
உள'' என உணர்ந்தனை ஆயின், ஒரூஉம்
2
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப,     5
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
நீ செல வலித்தனைஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
3
ஆவி அவ் வரி நீர் என நசைஇ,
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை,                    10
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்,
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை          15
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்,
கோல் கழிபு இரங்கும் அதர,
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது.
மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment