Pages

Saturday, 8 October 2016

அகநானூறு Agananuru 322

தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொண்டு வெதும்புகிறான். 

1
விளங்கும் வெயில் அடங்கும்படிப் பகலிலும், மின்னல் ஒளி தெரியும்படி இரவிலும் மழை பொழியும் நள்ளிரவில் அடக்க முடியாத காமம் என்னை ஆட்டிப் படைப்பதால் என் உடல் நடுங்குகிறது. 

மலை இடிந்து விழும்போது மலையூரில் வாழும் மக்கள் நடுங்குவது போல நடுங்குகிறேன். 

பாம்பு அடிக்கும் கோல் போலத் தனியே கிடந்து என் நெஞ்சு துடிக்கிறது. 

என் நெஞ்சே! இப்படித் துடிக்கிறாயா? துடித்துக்கொண்டே கிட.
2
களிற்றோடு களிறு மோதும் யானைப் போரில் வேலைக் கையிலேந்திப் போரிட்டு வென்ற பெரும்படை கொண்டவன் அரசன் திதியன். அவன் நாட்டில் இருப்பது பொதியமலை

பொதியமலைக் காட்டில் மரங்களுக்கு இடையே மழைவெள்ளம் பாயும். பிறைநிலாவைப் போன்ற கொம்புகளை உடைய காட்டுப்பன்றியும், அதனை அடித்துத் தின்னும் வரிப்புலியும் ஒலி எழுப்பும் (குழுமும்). அந்த மலைச்சாரலில் குரவர்கள் தேன் கூடுகளை அறுத்து எடுப்பர். 

அந்த மலையில் ஏற முயல்பவர் ஏறமுடியாமல் வருந்துவர். 

அந்தப் பொதிய மலையில் அணங்கு தெய்வம் இருக்கும். அது அழகால் ஆண்களை வருத்தும். அந்த அணங்கை அரவணைத்துத் துய்க்க முடியுமா? 

அதுபோல, நெஞ்சே, உன்னை வருத்துபவளையும் உன்னால் பெறமுடியாது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

1
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
பாம்பு எறி கோலின் தமியை வைகி,    5
தேம்புதி கொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
2
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,                  10
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
புகல் அரும், பொதியில் போலப்     15
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!

அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment