Pages

Thursday, 22 September 2016

அகநானூறு Agananuru 281

தலைவி தோழியை வினவுகிறாள்.


தோழி! என்ன செய்யலாம் என்று தெரிந்து சொல்.

ஒவ்வொரு நாளும் வந்து நம் இல்லப் பரப்பில் இருந்துகொண்டு, தன் ஆண்மையை வெளிப்படுத்தி, நம் அச்சம் அகலும்படி “பிரியமாட்டேன்” என்று கூறினார்.

அந்தச் சொல் பழுதாகிவிடுமே, என்னும் அச்சம் இல்லாமல் பிரிந்து பொருளீட்டச் சென்றுவிட்டார்.

மயில் தோகையை விரித்து ஆடும்போது அதன் பீலி கழன்று விழும். அந்தப் பீலியைப் பிளந்த வெள்ளை நாரால் வில்லில் வார்-நாண் கட்டிய கடைப்பகுதி அவிழாமல் இறுக்கம் தரும்படி (நொவ்வு இயல்)
கட்டியிருப்பர். 

அந்த வில்லிலிருந்து கணைக்கும் குரலுடன் அம்பு பாயும். கணைக்கும் ஒலியுடன் பாய்வது கணை

இப்படிப்பட்டட வில்லும் அம்பும் கொண்டவர் போராற்றல் மிக்க வடுகர்.

இந்த வடுகர் படை முன்னே வர, மோரியர் (மௌரியர்) படை பின்னே தென்திசை நோக்கி வந்தது.

அப்போது மோரியரின் தேர்ச்சக்கரம் உருளுவதற்காக, பனி படர்ந்த வானளாவிய மலையில் (நீலகிரி) பாதை அமைக்கப்பபட்டது. 

அந்தப் பாதையைக் கடந்து அவர் சென்றுள்ளார்.

இங்கே, ஊரில் பறை முழங்குவது போல, அவரையும் என்னையும் பற்றி அலர் தூற்றுகின்றனரே அதுதான் எனக்கு மிச்சம்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை 5
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,    10
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து, அவரோ சென்றனர்
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இது மயில் காவடி
வடுகர் வில்லில் மயில்-பீலி
ஒப்பிட்டு எண்ணிப் பாருங்கள்

மோரியர் ஆட்சிப் பரப்பு

No comments:

Post a Comment